காணாமல் போன 2 சகோதரிகள்... கண்மாயில் எலும்புக் கூடுகளாக மீட்பு.. சிவகங்கையில்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய் பகுதியில் 2 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. அவருக்கு புஷ்பா, அல்லி ராணி என 2 மனைவிகள், தங்கம் என்ற மகனும் சசிகலா, சுதா, லதா, பொன்னி, ஜெயப்பிரியா என்ற மகள்களும் உள்ளனர். இதில் முதல் மனைவி புஷ்பா இறந்து விட்டார். அவரின் மகள்கள் சசிகலா, சுதா, லதா ஆகியோருக்கு திருமணமாகி விட்டது.
இந்நிலையில் பொன்னி சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். பொன்னியின், தங்கை ஜெயப்பிரியாவும் அதே கல்லூரியில் தான் படித்து வந்தார். கடந்த மாதம் 18-ந் தேதி பொன்னியும், ஜெயப்பிரியாவும், புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் சகோதரி சுதாவை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது தங்களுக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தாங்கள் பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டோம் என்றும் கூறினார்களாம்.
தந்தைக்கு தகவல்
இதனால், அதிர்ச்சியடைந்த சுதா தனது தந்தை கருப்பையாவிற்கு இது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, கருப்பையா வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்த போது பொன்னி மற்றும் ஜெயப்பிரியாவையும் காணவில்லையாம். கருப்பையா அவர்களை அருகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேடி பார்த்துள்ளார்.
போலீஸில் புகார்
பல இடங்களில் தேடி பார்த்தும் தனது 2 மகள்களையும் காணவில்லை என்பதால் கருப்பையா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், காணாமல் போனவர்களை தேடி வந்தனர்.
2 எலும்புக் கூடுகள்
இந்நிலையில், வந்தவாசி அருகே உள்ள முத்துப்பட்டிணம் கண்மாய் பகுதியில் 2 எலும்புக் கூடுகள் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் பெண்கள் அணியும் காலணிகள், உடைகள் ஆகியவை கிடப்பதாக அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மகளுடையது தான்
இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு கருப்பையாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு கிடந்த உடைகள் மற்றும் காலணிகள் தனது மகளுடையது தான் என கருப்பையா தெரிவித்துள்ளார்.
எலும்புக் கூடுகள் மீட்பு
இதைத் தொடர்ந்து எலும்புக் கூடுகளை மீட்ட போலீஸார், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவை காணமல் போன பொன்னி மற்றும் ஜெயப்பிரியாவின் எலும்புக் கூடுகள் தானா என்பது பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும்.
தீவிர விசாரணையில் போலீஸார்
இயைடுத்து போலீஸார் இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 2 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.