பீச் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட புது பஸ்கள்.. அடடே என வேடிக்கை பார்த்தபடி சென்ற மக்கள்!
கடற்கரை சாலையில் வரிசையாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Recommended Video
சென்னை: சென்னை கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கான ஆளுயர பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 542 பேருந்துகளின் சேவைத் தொடக்கவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. தலைமை செயலகத்தில் புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் இருந்து சேலம், விழுப்புரம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இவ்விழாவுக்காக 542 புதிய பேருந்துகளும் சேலம், விழுப்புரம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அவைகள் தலைமை செயலகத்திற்கு அண்ணா சதுக்கம் வரை சாலையின் இரு புறங்களிலும் நிற்க வைக்கப்பட்டிருந்தன. அதேபோல, கண்ணகி சிலை வரை ஒரு பக்கமாக இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.
விழா நடைபெற்ற தலைமை செயலகம் பகுதியில் 5 பேருந்துகளை நிறுத்தவே இடம் இல்லாதபோது, சாலைகளின் இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்வோர், கடற்கரை சாலை வழியே அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பயணிகள் சாலைகளின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ஆளுயர பேருந்துகளை வியப்புடன் பார்த்து சென்றனர்.
இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பதை ஒரு சிலர் தங்களது செல்போனில் ஆர்வத்துடன் படம் பிடித்து சென்றனர்.