20 தமிழர்கள் சுட்டுப்படுகொலை: சிபிஐ விசாரணை கோரி மக்கள் நலன் காக்கும் இயக்கம் உண்ணாவிரதம்
சென்னை: ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திர வனப்பகுதியில் செம்மரங்கள் கடத்தியதாக, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அப்பாவி கூலித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர்.
ஆனால், இது என்கவுண்டர் அல்ல திட்டமிடப்பட்ட படுகொலை எனக் கூறப்படுகிறது.
அறப்போராட்டம்...
எனவே, இது தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும், தமிழக அரசு இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்தியும் அறப்போராட்டம் நடைபெறும் என மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்தது.
உண்ணாவிரதப் போராட்டம்...
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்திற்கு அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மதிமுக, விசிக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை பங்கேற்றன.
சிபிஐ விசாரணை வேண்டும்...
இதில் பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, "தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ.விசாரணை வேண்டும் என தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசு பிரச்னையை மூடி மறைத்து தட்டிக்கழிக்க முயற்சிக்கிறது.
மக்களை திரட்டி போராட்டம்...
உரிய நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசிற்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் . இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்" என்றார்.
குடும்பத்தாரும் பங்கேற்பு...
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட்டு கட்சி தமிழ்மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பெ.மணியரசன், தியாகு, நாகை திருவள்ளுவன், இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோரும், உயிரிழந்த 20 தமிழர்களின் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.