பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை... ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 30-இல் உண்ணாவிரதப் போராட்டம்
கொங்கு மாவட்டங்களின் நீராதாரமான பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.
ஈரோடு: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மேல்பவானியில் உற்பத்தியாகும் பவானி ஆறானது, கேரள எல்லையில் 24 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்த பகுதிகளில் 6 இடங்களில் 4 கி.மீ. தூரத்தில் தடுப்பணைகளை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. இதன்படி தேக்கோட்டை பகுதியில் ஏற்கனவே 150 அடியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மேலும் மஞ்சக்கட்டி பகுதிகளில் தடுப்பணையை அந்த மாநில அரசு கட்டி வருகிறது.
பவானி ஆற்றை நம்பி திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் ஆதாரம் உள்ளது. பவானி சாகர் அணை மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. கேரள அரசு தடுப்பணைக் கட்டினால் தங்களது குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு கடும் பஞ்சம் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விவசாயிகள், மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமாக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 21 அரசியல் கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன. எனினும் அரசு செவிசாய்க்கவில்லை.
இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல் ஏப்ரல் 4-ஆம் தேதி ஈரோட்டில் மனித சங்கிலி போராட்டமும் நடைபெறவுள்ளது.