பெரிய பள்ளம்... மனித உருவ பொம்மை... மனித ரத்தம்: ‘ஊட்டி’ புலியைப் பிடிக்க புது வியூகம்
ஊட்டி: ஊட்டியில் பொதுமக்களை தாக்கி அட்டகாசம் செய்து வரும் புலிகளை, பிடிக்க மனித உருவபொம்மையை மனித ரத்தம் தெளித்து வைத்து பிடிக்க கூட்டுப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த சில வாரமாக ஊட்டியை சுற்றியுள்ள பகுதியில் மனித வேட்டை நடத்தி வரும் புலியைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட வனத்துறை காவலர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், தொடர்ந்து அவர்களுக்கு போக்கு காட்டி வரும் புலிகளை பிடிக்க, அடுத்த முயற்சியாக மனித பொம்மை வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
புலித் தாக்குதல்...
இவ்வருடத் தொடக்கத்தில் கவிதா என்ற இளம்பெண்ணை புதருக்குள் பதுங்கியிருந்த புலி தாக்கி கொன்றது. அதன் சோகச்சுவடு மறைவதற்குள் 6-ந் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சின்னப்பன் என்ற தொழிலாளியும் புலியின் கோரப்பசிக்கு பலியானார்.
அடுத்தடுத்துத் தாக்குதல்....
அதனைத் தொடர்ந்து, ஊட்டி அருகேயுள்ள தூனேரி கிராமத்துக்குள் புகுந்த புலி ராமுகுட்டி என்பவரின் வீட்டின் பின்பக்கம் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தாக்கிவிட்டு ஓடிவிட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள், காலிபிளவர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த முத்துலட்சுமி என்ற பெண்ணை தாக்கிக் கொன்றது புலி.
5 நாளில் 3 பேர் பலி....
5 நாட்களுக்குள் 3 பேரின் உயிரை புலி காவு வாங்கிய சம்பவம் சோலடா, அட்டபெட்டு, குந்தசப்பை மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது.
பாதுகாப்புப் பணி...
பொதுமக்களின் உயிருக்கு உலைவைத்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினரும், கால்நடை மருத்துவர் தலைமையிலான குழுவினர் புலியின் உடலில் மயக்க மருந்து செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனல், புலி அகப்படவில்லை. வனத் துறையினர் துப்பாக்கி ஏந்திய நிலையில் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக, புலி வந்தால் தாக்க தயார் நிலையில் உள்ளனர்.
அசாதாரண சூழ்நிலை....
இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் புலி குறித்தான அச்சமும்-பீதியும் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற அசாதரண சூழ்நிலை நிலவுவதால் அப்பகுதியில் உள்ள 45 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தடை...
தொட்டபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
புலி உருவம்....
இந்நிலையில், புலிகளை கண்காணிப்பதற்காக ஊட்டி அருகே குந்தசப்பை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த தானியங்கி கேமிராவில் நேற்று முன்தினம் புலி உருவம் பதிவானது.
பட்டாசு வெடித்து வேட்டை...
இந்த புலியை வெளியே கொண்டு வருவதற்காக நேற்று காலையில் தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிகளில் கூட்டுப்படையினர் பட்டாசுகளை வெடித்தனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த தேடுதல் வேட்டையில் புலிகள் சிக்கவில்லை.
மாட்டின் உடல்...
இதைத்தொடர்ந்து, புலியை ஈர்ப்பதற்காக தேயிலை தோட்ட பகுதியில், இறந்த மாட்டின் உடல் போடப்பட்டது. இதை உண்பதற்காக புலிகள் வந்தால் அவற்றை பிடிப்பதற்காக, புலிகளின் நடமாட்டம் உள்ள தேயிலை தோட்ட பகுதியில் பரண் அமைத்து அதில் ஒரு கூண்டு வைத்து, அதில் ஒரு வனத்துறையினர் மற்றும் ஒரு அதிரடிப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனித உருவ பொம்மை....
இதிலும் புலி சிக்காவிட்டால் தேயிலை தோட்ட பகுதியில் ஒரு பெரிய பள்ளத்தை தோண்டி அதை வலையால் மூடி வைப்பதோடு, வலையின் மீது மனித உருவ பொம்மை வைக்கவும், அதன் மேல் மனித ரத்தம் தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மனித ரத்த வாடை பட்டு புலிகள் வெளியே வந்தால் வலையில் சிக்கிக்கொள்ளும் என்றும் வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தொடர் தேடுதல் வேட்டை....
இது குறித்து மாநில முதன்மை வனப்பாதுகாவலர் லட்சுமிநாராயணன் கூறுகையில், ‘ஊட்டியில் பொது மக்களை தாக்கி வரும் புலிகளை பிடிக்க கூட்டுப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கையால் கடந்த 8-ந் தேதிக்குப்பின் மனிதர்கள் யாரையும் புலிகள் தாக்கவில்லை.
20 தானியங்கி கேமராக்கள்...
இந்த புலிகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது கேமிராவில் பதிவாகி உள்ள புலிகள் மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த பலவீனமான புலிகள் விரைவில் பிடிக்கப்படும். இதற்காக தேயிலை தோட்ட பகுதி மற்றும் வனப்பகுதிகளில் 20 தானியங்கி கேமிராக்கள் அமைக்கப்பட்டு புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.