இப்படியும் ஒரு புருஷனா.. மனைவி பற்றி பேஸ்புக்கில் அசிங்கமாக பதிவு போட்டவருக்கு ஜெயில்!
மனைவி குறித்து தவறான தகவலை பதிவிட்ட கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
துரைப்பாக்கம்: பேஸ்புக்கில் கட்டின மனைவி பற்றியே அவதூறு பரப்பிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வெட்டுவாங்கணி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சுகுணா என்பவர் பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வயது 32. கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் சென்னை வந்தார்.
இந்நிலையில், மீண்டும் சுகுணாவை பிரான்ஸ் போகும்படி செல்வராஜ் சொல்லியுள்ளார். ஆனால் சுகுணாவோ தமிழ்நாட்டிலேயேதான் இருப்பேன் என்றும், மீண்டும் வெளிநாடு செல்ல விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனாலும் செல்வராஜ் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதமும், தகராறும் வந்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்வராஜ், தனது மனைவியை எப்படியாவது வெளிநாடு போக வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டார். அதன்படி, பிரான்சில் வேலை பார்க்கும்போது, சுகுணாவுக்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறி பேஸ்புக்கில் அவதூறு தகவலை பதியவிட்டார்.
இதனை கண்ட சுகுணா கடும் அதிர்ச்சி அடைந்து மன உளைச்சலுக்கு ஆளானார். உடனடியாக நீலாங்கரை போலீசிலும் புகார் அளித்தார். அதன்பேரில் செல்வராஜை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுகுணாவை வெளிநாட்டுக்கு அனுப்பினால், அவரது சம்பள பணம் அனைத்தும் தனக்கு கிடைப்பதாகவும், அந்த பணத்தில் ஆடம்பரமாகவும், உல்லாசமாகவும் வாழ ஆசைப்பட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பணத்திற்காக கட்டின மனைவியையே இவ்வளவு கேவலமாகவும், இழிவாகவும் அவதூறு பரப்பிய கணவனின் செயல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.