என் பொண்டாட்டி கிட்ட அடி வாங்க முடியல.. செத்தே போயிடறேன் சார்.. எடப்பாடி வியாபாரியின் கதறல்!
மனைவியிடம் அடி வாங்க பயந்து வியாபாரி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்
எடப்பாடி: பொண்டாட்டி கிட்ட இருந்து அண்ணாமலைக்கு அடி ஒவ்வொவ்வொன்னும் அம்மி மாதிரி விழும் போல. மனுஷன் வலி தாங்காம சாகவே போய்ட்டார். இந்த கூத்தை படிங்க.
எடப்பாடி அருகே உள்ள ஊர் மோளக்கவுண்டன் கொட்டாய். இங்கு வசிப்பவர்தான் அண்ணாமலை. 45 வயதாகும் அண்ணாமலை ஒரு ஐஸ் வியாபாரி. இவருக்கு தமிழரசி என்ற மனைவி இருக்கிறார். இவர் அண்ணாமலைக்கு 4-வது மனைவி. அண்ணாமலை வியாபாரத்திற்கே போவது கிடையாதாம். ஊர் சுற்றுவதுதான் முக்கிய வேலையாக இருந்திருக்கிறது. அதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை, தகராறு வந்திருக்கிறது. சில நேரங்களில் தமிழரசி கோவை சரளா போல் அவதாரம் எடுத்து அண்ணாமலையை பின்னி பெடலெடுத்து விடுவாராம்.
காயமடைந்த அண்ணாமலை
நேற்றுமுன் தினம்கூட வழக்கம்போல் சண்டை வெடித்துள்ளது. தமிழரசியும், அவரது சொந்தக்காரர்களும் சேர்ந்து அண்ணாமலையை அடித்துள்ளனர். அதாவது 108 ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாமலை மீட்கப்பட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு செம பாதிப்பு என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
இனிமே அடிக்க மாட்டேன்
சிகிச்சை பெற்று வந்த அண்ணாமலையிடம், போலீசார் வந்து விசாரணை நடத்த முற்படுவதாக தகவல் வந்தது. இதனை கேள்விப்பட்ட தமிழரசி ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார். "புகார் எல்லாம் எதுவும் தந்துடாதே... இனிமே இப்படி அடிக்க மாட்டேன்..." என்று அண்ணாமலையை சமாதானம் செய்தார். தமிழரசி இப்படி பேசியதை புதிதாக பார்த்த அண்ணாமலையோ, அந்த பேச்சில் விழவே இல்லை. இதைவிட்டால் நமக்கு சந்தர்ப்பம் அமையாது என்று நினைத்த அண்ணாமலையோ, தமிழரசி பேச்சில் சமாதானம் அடையாமல், திடீரென ஆஸ்பத்திரி கட்டிடத்தின் மீது ஏறி நின்று கொண்டார்.
அடி தாங்க முடியல
பிறகு, "என்னால என் பொண்டாட்டி அடிக்கிறதை தாங்கிக்கவே முடியல. வலி உயிரே போகுது.. அதனால நான் தற்கொலை செய்துக்க போறேன்" என்று கதறி கூறினார். இதனால் ஆஸ்பத்திரி வட்டாரமே அதிர்ந்து போனது. இதனை கேள்விப்பட்டு போலீசாரும், தீயணப்பு துறையினரும் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். அண்ணாமலையை சாந்தமாக பேசி சமாதானம் செய்ய முயன்றனர்.
நான் செத்தே போயிடறேன்
ஆனால் அவர்களிடமும் அண்ணாமலை, சார்... என்னை விட்டுடுங்க சார்... என்னால முடியல. அவ அடிச்சா என்னால தாங்கவே வலி தாங்க முடியல. நான் செத்தே போயிடறேன்" என்று கண்களில் தாரை தாரையாக கண்ணீர்விட்டு கெஞ்சினார். இதனால் அண்ணாமலையை மீட்பு வீரர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கடினமாக நடந்து கொள்ளவும் முடியவில்லை. எல்லோருக்கும் அண்ணாமலை பார்த்தால் பாவமாக இருந்தது.
இப்படியா அடிப்பது?
கடைசியில் கெஞ்சி கெஞ்சியே அண்ணாமலையை ஒருவழியாக மீட்டு கூட்டி வந்தனர். தொடர்ந்து அதே ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. உத்தியோகம் புருஷலட்சணம் என்பதை மறந்து அண்ணாமலை இருந்திருக்கவும் கூடாது. தற்கொலையே மேல் என்று துணிந்து இறங்கும் அளவுக்கு கணவனை ஒரு பெண் கை நீட்டி அடித்திருக்கவும் கூடாது.