முதல் மனைவி இருக்கும் போதே 2 ஆவது திருமணம் – கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை!
பொன்னேரி: பொன்னேரியில் ஏற்கனவே திருமணம் செய்த மனைவியை வரதட்சணைக் கொடுமை செய்து தள்ளி வைத்துவிட்டு 2 ஆவது திருமணம் செய்து கொண்ட கணவனுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை அளித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள செதில்பாக்கத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சந்தோஷம். இவர்களுக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது.
இந்த நிலையில் சந்தோஷத்திடம் கூடுதல் நகை, பணம் வரதட்சணையாக கேட்டு திருப்பதி கொடுமை செய்தார். மேலும் பரிமளா என்பவரை 2 ஆவது திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து பொன்னேரி மகளிர் போலீசில் சந்தோஷம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர். இந்த வழக்கு பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்து நீதிபதி பிரேமாவதி தீர்ப்பு கூறினார்.
அதில், திருப்பதிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.