அம்பத்தூரில் குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம்.. 11வது மாடியிலிருந்து தள்ளி மனைவி கொலை- கணவர் கைது
மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்
அம்பத்தூர்: தாய் வீட்டிலேயே இருந்துகொண்டு, குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை 11வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் சேலைவாயல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கண்ணு 37. கும்மிடிப்பூண்டி தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், அம்பத்தூரில் வசித்து வரும் தனது அக்கா சுகுணாவின் மகள் ஜெயசுதாவுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஜெயசுதாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதை கணவர் ராஜ்கண்ணு தட்டிக்கேட்டதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜெயசுதா கோபித்துக்கொண்டு, கொரட்டூர் கெனால் ரோட்டில் 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தன் அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.
இதையடுத்து, ராஜ்கண்ணு பலமுறை ஜெயசுதாவை குடும்பம் நடத்த வீட்டுக்கு வருமாறு அழைத்தபோதும் ஜெயசுதா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில், ராஜ்கண்ணு தனது அக்கா சுகுணா வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் ராஜ்கண்ணு, 'உங்கள் மகள் என்னுடன் வந்து வாழ சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அக்கா சுகுணா, ''நீங்கள் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் பேசி, முடிவுக்கு வாருங்கள்'' என கூறிவிட்டு தனது மகன் கார்த்திக்குடன் ஹாலில் பேசிக்கொண்டிருந்தார்.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தம்பதி இடையே வாக்குவாதமாக மாறி, பின்பு தகராறாக உருவெடுத்தெடுத்து. இந்த தகராறில், ஆத்திரம் அடைந்த ராஜ்கண்ணு மனைவி ஜெயசுதாவை வீட்டின் ஜன்னல் வழியாக 11வது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
ஜெயசுதாவின் அலறல் சத்தம்கேட்டு சுகுணா மற்றும் கார்த்திக் இருவரும் அக்கம் பக்கத்தினருடன் கீழே ஓடி வந்து பார்த்தபோது ஜெயசுதா மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயசுதாவை மீட்டு, அண்ணாநகர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசுதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஜெயசுதாவின் தாய் சுகுணா கொடுத்த புகாரின்பேரில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்கண்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.