ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக் கொலை... மதுரை அருகே ராணுவ வீரர் வெறிச்செயல்!
மதுரை: மதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைப் பிரிந்த கோபத்தில், இக்கொலைகளை செய்ததாக ராணுவ வீரர் கமலக்கண்ணன் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூர் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (60). இவரது மனைவி ராமுத்தாயி (55). இத்தம்பதியினருக்கு பாக்யலட்சுமி (35), கோமதி (28), வனரோஜா (23) என 3 மகள்கள். இவர்களில் பாக்யலட்சுமிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராணுவ வீரர் கமலக்கண்ணனுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், மணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களது விவகாரத்து வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் சின்னச்சாமியின் உறவினரான அ.தொட்டியபட்டியை சேர்ந்த ராமர் மகளுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. நேற்று ராமரின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இதில் பங்கேற்க சின்னச்சாமியின் குடும்பத்தினர் ராமரின் வீட்டிற்கு வந்திருந்தனர். மாலை 6 மணிக்கு அங்கு வந்த கமலக்கண்ணன், அவரது தம்பி பரமசுந்தர் (29), ஆகியோர் சின்னச்சாமியுடன் தகராறு செய்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த சண்டை நீடித்தது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில், இரவு 8:15 மணியளவில், சகோதரர்கள் இருவரும் அரிவாளால் சின்னச்சாமி, ராமுத்தாயி, மகள்கள் பாக்யலட்சுமி, கோமதி, வனரோஜாவை வெட்டிச் சாய்த்தனர். இதில், வெட்டுப்பட்ட ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின், கமலக்கண்ணன், பரமசுந்தர் நாகையாபுரம் போலீசில் சரண் அடைந்தனர்.
விடுமுறையில் விபரீதம்:
கொலை செய்த கமலக்கண்ணன் டெல்லியில் 'ஹவில்தாராக' பணிபுரிந்து விடுமுறையில் அ.தொட்டியபட்டிக்கு வந்திருந்தார். மனைவி குடும்பத்தினர் தனது சொந்த ஊருக்கே வந்தது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் இந்தக் கொலைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், விவாகரத்திற்குப் பின் கோமதிக்கு மறுமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் நடவடிக்கை எடுத்து வந்ததாகவும், இதுவும் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் மனைவி கோமதியை கமலக்கண்ணன் அரிவாளால் வெட்டிய போது உறவினர்கள் தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அவரிடம் துப்பாக்கி இருந்ததால் உறவினர்கள் பயந்து ஓடி விட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்த சின்னச்சாமியின் மகன் தங்கப்பாண்டி, 32, வெளியூரில் இருந்ததால் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதனால் அவர் உயிர் தப்பியது.
சரணடைந்த கமலக்கண்ணன் மற்றும் அவரது தம்பியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.