கணவரின் குடியால் வந்த வினை… மனைவி தற்கொலை - 4 குழந்தைகள் அனாதை
சேத்துப்பட்டு: கணவரின் குடிப்பழக்கத்தால் விரக்தி அடைந்த 4 பெண் குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சேத்துப்பட்டு அடுத்த ராந்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 8 மாத குழந்தை உள்பட 4 மகள்கள் உள்ளனர்.
ஜானகிராமனுக்கு தீராத குடிப்பழக்கம் இருந்துள்ளது. சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு தராமல் குடித்து செலவழித்துள்ளார்.
இதுபற்றி மீனாட்சி தட்டிக் கேட்டதால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 4 பெண் குழந்தைகளை பெற்றும் கணவன் பொறுப்பில்லாமல் இருக்கிறாரே என மனமுடைந்த மீனாட்சி, நேற்று வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
இதை அறிந்த பக்கத்து வீட்டார் அவரை மீட்டு சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.