குழந்தைக்கு கழுதை பால் கொடுத்ததால் கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை
குழந்தைக்கு கழுதை பால் கொடுத்ததை கணவர் தட்டி கேட்டதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு: குழந்தைக்கு கழுதை பால் கொடுத்ததை கணவர் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம், செங்கோடம்பள்ளம், ரூபி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி மகாலட்சுமி (39). இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மகாலட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது தெருவில் கழுதை பால் விற்றது. கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் குரல் வளம் நன்றாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இதை அறிந்த மகாலட்சுமி, அந்த பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்தார்.
கணவன் கோபம்
இதை கண்ட கிருஷ்ணன், குழந்தைகளுக்கு கழுதை பால் கொடுத்தால் ஏதாவது ஆகிவிடும். அதை ஏன் கொடுக்கிறாய் என்று கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோபமாக மகாலட்சுமியை திட்டினாராம்.
மனமுடைந்த மகாலட்சுமி
இதனால் மனமுடைந்த மகாலட்சுமி, வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். இதை கண்டதும் பதறிய கிருஷ்ணன் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கிருஷ்ணன் அந்த அறையின் கதவை உடைத்தார்.
தூக்கிட்டு தற்கொலை
அப்போது மகாலட்சுமி தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பரிதாபம்
கழுதைப் பால் விவகாரத்தால் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இப்போது அந்த குழந்தைகள் நிலை என்ன என்று உறவினர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.