கொதிக்கும் பாலை மனைவி மீது ஊற்றிய கணவன்.. வரதட்சணை கேட்டு சித்ரவதை.. திண்டுக்கல் போலீசார் விசாரணை
மனைவியை வரதட்சணைக்காக கொடுமைப்படுத்திய கணவனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்: வரதட்சணை காரணமாக கட்டிய மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றி சித்திரவதை செய்த கணவனிடம் போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள கிராமம் ரெட்டியபட்டி. இப்பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று தற்போது 2 பிள்ளைகள் உள்ளனர்.
சக்திவேல் கடந்த 7 ஆண்டுகளாக வரதட்சணை பிரச்சனையை தன் மனைவியிடம் எழுப்பியதுடன், அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவியிடையே தகராறும் ஏற்படும் என கூறப்படுகிறது. பல்வேறு சமயங்களில் வரதட்சணை வேண்டும் என்று கொடுமைப்படுத்தி சித்திரவதையும் செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
சம்பவத்தன்றும் மீண்டும் தம்பதிக்குள் வரதட்சணை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போதும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சக்திவேல் அப்போது அடுப்பில் கொதித்து கொண்டிருந்த பாலை எடுத்து மனைவியின் மீது ஊற்றினார். அத்துடன் அடங்காமல் கொலை மிரட்டலும் விடுத்தார்.
கொதிக்கும் பால் தன் மேல் பட்டதால் துடிதுடித்து கதறி அழுத சகுந்தாலாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடமதுரை போலீசார் வரதட்சணைக்காக கொடுமைப்படுத்திய சக்திவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.