கடன் தொல்லை.. கணவன், மனைவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கணவன், மனைவி இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பிஜுலு. இவர் சொந்தமாக ஓர்க் ஷாப் வைத்துள்ளார். வியாபார சம்பந்தமாக குமார் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே தொழில் சரிவர நடக்காததால் கடனை அடைக்க முடியாத சூழ்நிலையில் பிஜுலு இருந்துள்ளார். இதனையடுத்து பணம் கொடுத்த குமார் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் உள்ளிட்ட 30 பேருடன் பிஜுலு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கடன் வாங்கிய பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் வெளியே வீசி விட்டு வீட்டை பூட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மனமுடைந்த பிஜுலு மற்றும் அவரது மனைவி இந்து ஆகியோர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தனர். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் தடுத்து அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது