உங்கள் சித்தப்பா தான் காரணம் : மகன்களுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்த சேலம் தம்பதி
சேலத்தில் உறவினரின் தொல்லையால் மகன்களுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சேலம் : சேலம் அருகே உறவினரின் தொல்லை தாங்காமல் மகன்களுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, கணவன் - மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் குகை அருகே உள்ள நரசிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சந்திரகலா. இந்த தம்பதிக்கு அருண்பிரகாஷ், ஜெய்கார்த்திக் என்கிற இரு மகன்கள் உள்ளனர். அருண்பிரகாஷ் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், ஜெய்கார்த்திக் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள அருண்பிரகாஷ் அவரது தந்தை நடராஜனிடம் இருந்து வந்த கூரியரை பிரித்து படித்து உள்ளார். அதில், 'உன் சித்தப்பா விஜயராகவனின் தொல்லை தாங்காததால், நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம்' என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த கவரில் வீட்டு சாவியும் வைக்கப்பட்டு இருந்தது.
பெற்றோரின் தற்கொலை கடிதம்
அதிர்ச்சி அடைந்த அருண்பிரகாஷ், உடனடியாக சேலத்தில் உள்ள தனது தாயின் உறவினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி, வீட்டை சோதனையிட சொல்லி இருக்கிறார். அங்கு சென்றபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததை அறிந்த உறவினர், செவ்வாய்ப்பேட்ட காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
கணவன் - மனைவி தற்கொலை
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கட்டிலில் நடராஜன் - சந்திரகலா தம்பதிகள் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவர்கள் எழுதி வைத்திருந்த நான்கு பக்க கடிதம், இரண்டு பென் டிரைவ், ஒரு சி.டி ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.
சொத்து பிரச்சனையால் தற்கொலை
இதுகுறித்த விசாரணையில், நடராஜன் வசித்து வந்த வீட்டின் முதல் மாடியில் அவருடைய தம்பி விஜயராகவன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்களது தந்தை சோமசுந்தரம் இந்த வீட்டை நடராஜனின் இரண்டு மகன்கள் பெயரில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சமீபத்தில் வீட்டை காலி செய்யுமாறு நடராஜன் தன்னுடைய தம்பியிடம் கூறி உள்ளார். இதற்கு விஜயராகவன், 1 கோடி ரூபாய் தந்தால் வீட்டை காலி செய்வேன், இல்லையெனில் உங்களை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
தகாத வார்த்தைகளால் அர்ச்சனை
இதற்கிடையில் விஜயராகவனின் குடும்பத்தினர் சந்திரகலாவை அடிக்கடி தகாத வார்த்தையால் திட்டி மிரட்டி உள்ளனர். இதனால் நடராஜன், சந்திரகலா இருவரும் கடும் மன உளைச்சலில் அங்கு வசித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவரங்கள் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சொத்து தகராறில் தற்கொலை
நடராஜன் தனது மகன்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், தன்னுடைய தம்பி விஜயராகவன் ஆரம்பத்தில் இருந்து இதுவரை நடராஜனுக்கு கொடுத்த தொல்லைகள் அனைத்தையும் விரிவாக எழுதியிருந்ததாகவும், தங்களுடைய தற்கொலைக்கு விஜயராகவன் குடும்பத்தினர்தான் காரணம் என்று அதில் எழுதப்பட்டு இருந்தது எனவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயராகவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துத் தகராறில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.