மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் மரணம்– ஆலங்குளத்தில் பரபரப்பு
கடையம், நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் உயிரைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையை சேர்ந்தவர் புத்திசிகாமணி. ஓய்வு பெற்ற சர்வேயரான இவருக்கு சந்திரா என்ற மனைவி மற்றும் 4 மகன்கள் இருந்தனர். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த இவரது மனைவி சந்திரா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் புத்திசிகாமணி வேதனையில் இருந்து வந்தார். நேற்று காலை புத்திசிகாமணி மற்றும் அவரது உறவினர்கள் சுடுகாட்டிற்கு சென்று ஈமகிரியை சடங்கு நடத்தி விட்டு வீடு திரும்பினர். வீடு திரும்பிய புத்திசிகாமணி தொடர்ந்து சோகத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கத்திலேயே புத்திசிகாமணி உயிர் பிரிந்தது. மனைவி இறந்த 2 நாட்களில் கணவனும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து புத்திசிகாமணி உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.