புற்றுநோய்க்கு வித்திடும் ஹைட்ரோ கார்பன்.. இதுவரை 25 பேர் பலி.. குழந்தைகளும் பாதிப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 இடங்களில் ஒஎன்ஜிசி எண்ணெய் எடுக்கும் திட்டத்தை தொடங்கியதால் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஆழ் துளையிட்டு எண்ணெய் எடுக்கும் திட்டத்தை நடைமுறை படுத்தியதால் இதுவரை வாணக்கன் காட்டுப் பகுதியில் 25க்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும் பலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சையை பெற்று வருவதாகவும் மக்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 இடங்களில் 1991ம் ஆண்டு ஆழ்துளை கிணறு தோண்டி எண்ணெய் எடுக்கும் திட்டத்தை ஒஎன்ஜிசி நடைமுறைப்படுத்தியது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வாணக்கன்காடு கிராம மக்கள் கூறும் போது, 1991ம் ஆண்டு மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் 14 ஆயிரத்து 500 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது அதில் இருந்து பல நோய்களை சந்தித்து வருவதாகவும், குழந்தைகள் மூளை வளர்ச்சியின்றி பிறப்பதாகவும் பகீர் தகவலை தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் கசிவு
எண்ணெய் எடுக்க தோண்டுவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடத்தில் 2012-ம் ஆண்டு முதல் எண்ணெய் மற்றும் வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயுவை சுவாசித்த அந்தப் பகுதி மக்களுக்கு திடீர் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
வற்றிய நிலத்தடி நீர்
அப்போதில் இருந்து நிலத்தில் நீர் முற்றிலுமாக வற்றியது. இதனால் இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டது. நீர் வற்றியதால் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய்க்கு 25 பேர் பலி
இந்த எண்ணெய் கிணறு தோண்டப்பட்ட பின்னர், வாணக்கன் காடு பகுதியில் 25 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஆழ்துளை கிணறு அமைக்க நிலத்தை வழங்கிய மாரிமுத்து, ராமன், வேலன், மூர்த்தி, காமாட்சி உள்பட 10 பேர் இறந்து விட்டனர். அதே போல் கோட்டைக்காடு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய மேரி, லியோ ஆரோக்கிய மேரி, நேசா, செபஸ்தியான் உள்பட 10 பேர் இறந்துள்ளனர்.
நோய் பாதிப்பு
நிலத்தின் உரிமையாளர் மாரிமுத்துவின் மனைவி அன்னக்கிளி, செல்வம், சின்னாத்தா உள்பட 15 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான சிகிச்சையை தற்போது பெற்று வருகின்றனர்.
கால்நடைகளுக்கு நோய்
மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் போன்றே ஆடு, மாடுகளும் கடுமையான நோய்க்கு ஆளாகியுள்ளன. 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இதுவரை உயிரிழந்துள்ளன.
குழந்தைகளுக்கு நோய்
பெரியவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றால் பிறக்கும் குழந்தைகளும் பல்வேறு நோய்களுடனேயே பிறக்கின்றன. இந்த பகுதியில் பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியும், கை கால் ஊனமாகவும் பிறக்கின்றன. இதற்கு ஜான்பிரிட்டோ, மெட்டிடா மேரி ஆகியோர் மூளை வளர்ச்சியின்றி பிறந்து சாட்சியாய் வாழ்ந்து வருகின்றனர். ஆகாஷ் என்பவர் கால் ஊனத்துடன் பிறந்துள்ளார். இதுபோன்று பல குழந்தைகள் கோட்டைக்காடு பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பல குழந்தைகள் பிறந்த உடன் இறந்து போவதும் அதிகரித்து வருகிறது.