நெடுவாசலில் ரொம்ப ஆழமா தோண்டத் தேவையில்லை.. "விஞ்ஞானி" தமிழிசை விளக்கம்!
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அதிக ஆழமாக பூமியைத் தோண்ட வேண்டியதில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: மீத்தேன் திட்டம் என்பது வேறு, ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது வேறு என செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் தமிழக பாஜக தலைவர் தமிழைசை சௌந்தராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்துப் போட்ட திமுக, இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடும் என்று கூறுவது சந்த்ர்ப்பவாதம்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயத்துக்கும் மக்களுக்கும் ஆபத்தானது என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. காரணம் மீத்தேன் திட்டத்துக்கு மிக அதிக ஆழமாகக் குழி தோண்ட வேண்டும். ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அவ்வாறு தோண்ட வேண்டிய தேவை இல்லை என்று கூறினார்.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் விஞ்ஞானிகளா என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேட்டது, பலத்த கேலிக்குள்ளாகி வரும் நிலையில் தமிழிசையின் இந்த கருத்து சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.