ஹைட்ரோகார்பன் திட்டத்தால் வேதாந்தா நிறுவனத்திற்கு பணம்.. தமிழகத்திற்கு அழிவு.! வைகோ ஆவேசம்
மரக்காணம்: மத்திய அரசு திட்டமிட்டே தமிழகத்தை அழிக்கும் வேலைகளில் இறங்கியிருப்பதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் கடலோர மாவட்டங்களில் 596 கி.மீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
ராமேஸ்வரம் முதல் மரக்காணம் வரை 596 கி.மீ தொலைவுக்கு நடைபெற்று வரும் மனித சங்கிலி போராட்டத்தில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளோடு திமுக, மதிமுக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் என பல்லாயிரக்கணக்கானோர் பங்ககேற்றுள்ளனர்.
மரக்காணத்தில் நடைபெறும் போராட்டத்தில் வைகோ, பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மனித சங்கிலியில் பங்கேற்ற வைகோ செய்தியாளர்களிடம் பேசிய போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும், தமிழகம் பாலைவனமாகும் என எச்சரித்தார்.
மேலும் பேசிய வைகோ லட்சக்கணக்கான லிட்டர் நீரை ரசாயனம் கலந்து நிலத்துக்குள் செலுத்துவதால் மிக கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டால், நிலத்தடி நீர் நஞ்சாக மாறி விடும். மேலும் காவிரி படுகையில் 25 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படும் என்றார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் வேதாந்தா நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். ஆனால் தமிழகமோ அழிந்து போகும்.
தமிழகம் அழிவதை தடுக்க தான் 596 கிமீ தொலைவிற்கு மனித சங்கிலி அமைத்து அறவழியில் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார். இது போன்ற திட்டங்களால் தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீரே இல்லாமல் போகும். அப்போது மக்கள் என்ன செய்வார்கள் என்று சிந்திக்க கூட இயலவில்லை என வேதனை தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றில் இப்படியொரு பேராபத்து தமிழகத்திற்கு வந்ததே இல்லை எனவும் குறிப்பிட்டார்.
ஓ.என்.ஜி.சி. வேதாந்தா நிறுவனங்கள் 341 எண்ணெய் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதித்தற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்
விழுப்புரம் கடலூர் திருவாரூர் நாகை தஞ்சை புதுக்கோட்டை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரழிவிற்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வரை, தொடர் போராட்டங்கள் நடத்துவோம் என விவசாயிகள் முழக்கமிட்டனர்