நான் தினகரனை விட 18 வருஷம் சீனியர்... ஓ.பன்னீர்செல்வம் தடாலடி!
சென்னை : டிடிவி. தினகரன் ஒரு மாயமான், அவர் சொல்வது போல அவர் ஒன்றும் என்னை கட்சியில் அறிமுகம் செய்யவில்லை, நான் அவரை விட 18 வருஷம் சீனியர் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது : தொகுதியில் இன்றும் 20 ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு வாக்காளர்கள் இன்னும் பணம் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். தினகரனைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவர் ஒரு மாயமான்.
மாயமானை நம்பிப்போனவர்களுக்கு என்ன கதிஏற்பட்டது என்று ராமாயணத்தில் படித்திருப்பீர்கள், அந்தக் கதை தான் நடக்கப் போகிறது. எங்கள் பக்கம் இருப்பவர்கள் அனைவரும் புடம் போட்ட தங்கங்கள் யாராவது ஒருத்தராவது அவர்கள் பக்கம் போய் இருக்கிறார்களா, அவர்கள் சொல்வது அனைத்துமே பொய்.
நான் 1980லேயே அரசியலுக்கு வந்தவன்
எனக்கு நன்றாகவே தெரியும், தினகரன் அரசியலுக்கு வந்த பிறகு என்ன சொன்னார், என்னை அறிமுகப்படுத்தியதே அவர்தான் என்றார். அவர் பெரியகுளத்திற்கு வந்தது 1998, நான் 1980 முதலே அரசியலில் இருக்கேன்.
பொய்யை வழக்கமாக கொண்ட தினகரன்
நான் தினகரனை விட 18 வருடம் சீனியர், இந்த 18 வருட அரசியலில் சாதாரண வார்டு பதவி, வார்டு செயலாளர், நகர துணை செயலாளர், நகர செயலாளர்,மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளர், நகரத் தலைவர், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர், அமைச்சர் அதன் பின்னர் ஜெயலலிதாவார் முதல்வரானேன். ஆக இத்தனை பதவிகளைத் தாண்டித் தான் நான் இந்த பொறுப்புக்கு வந்தேன், அவர் சொல்வதில் எவ்வளவு பொய் இருக்கிறது பாருங்கள்.
இன்னொரு முகம்
தினகரன் சொல்வது எல்லாம் அந்த நேரத்தில் ஏதாவது சொல்லி ஏமாற்ற வேண்டும் அந்த நிலையில் தான் அவர் பேசுவார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி தினகரன் சொல்வார், என்னுடைய ஒரு முகத்தை தான் பார்த்திருப்பீர்கள், இன்னொரு முகம் பின்னால் இருக்கிறது அதை காட்ட மாட்டேன், நேரம் வரும் போது காட்டுவேன் என்பார்.
420 என தினகரனே ஒப்பு கொண்டிருக்கிறார்
மற்றொரு முறை பேசும் போது சொல்வார் நான் ஒரு 420 உங்களுக்குத் தெரியாது. போகப் போகத் தெரியும் என்று சொல்லி இருக்கிறார், இது உண்மை சத்தியவாக்கு என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.