நானும் தமிழச்சிதான்.. சீமானுக்கு தமிழிசை பதிலடி
நானும் தமிழச்சிதான், தமிழ் உணர்வாளர்கள் தமிழுக்காக என்ன செய்தார்கள் என்றும் எதிர்மறை அரசியலை சீமான் கைவிடவேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை: நானும் தமிழச்சிதான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சீமான் பிரிவினைவாத, தூண்டுதலான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்கிறார். அவன், இவன் என்று வார்த்தைகளை பயன்படுத்திப் பேசுகிறார்.
சீமானை, நான் திருப்பி கேட்க ஆரம்பித்தால் சரியாக இருக்காது. ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவரது கருத்தை தான் வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு முன்பே அவருக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் என்ற போர்வையில் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
எதிர்மறை அரசியல்
சீமானை விட வேறு யாரும் தமிழ் உணர்வில் குறைந்தவர்கள் இல்லை. எனக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தமிழ் உணர்வு அவரைவிட அதிகமாகவே இருக்கிறது. நாங்களும் தமிழ் ரத்தங்கள்தான். நானும் தமிழச்சிதான். தமிழுக்காக சீமான் போன்ற தமிழ் உணர்வாளர்கள் செய்தது என்ன? எதிர்மறை அரசியலை தூக்கிப் பிடிப்பது சரியல்ல. இந்த போக்கை சீமான் கைவிடவேண்டும்.
திருநாவுக்கரசர் எம்.பியானார்
தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்தபோது வடமாநிலத்தில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சரானார். அதுபோல பலரும் பல்வேறு மாநிலங்களில் பொறுப்பு வகித்துள்ளனர். எனவே தமிழை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்.
தமிழுக்கே ஊறு
சீமான் மட்டும் தமிழர் அல்ல. எல்லோருமே தமிழர்கள் தான். அந்த உணர்வு மட்டுமே இருக்க வேண்டும். தமிழை தூக்கிப் பிடிப்பதாக நினைத்து, தமிழ் மொழிக்கு ஊறுவிளைவிக்கக்கூடாது.
தேசிய சிந்தனை
நடிகர் ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் தேசிய சிந்தனை உள்ளவர். எனவே பாரத பிரதமர் மோடி, அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோருடன் இணைந்து ஊழலை ஒழிக்க ரஜினி எங்களுடன் வரவேண்டும் என்று தனிப்பட்ட கருத்தை தெரிவிக்கிறோம்.
பலத்தை கூட்டுவதில் தப்பில்லை
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை கூட்டி வருகிறது. அதனுடன் மேலும் பலம் சேர்ப்பதற்காக ரஜினியை அழைப்பதில் தவறு ஏதும் இல்லை. ரஜினிகாந்தை பாஜக பின்பக்கமாக இருந்து இயக்குகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் எப்போதுமே முன்பக்கமாக இருந்து அரசியல் செய்து வருகிறோம்." என்று கூறியுள்ளார்.