என்னை ஏன் மாணவர்களுக்கு இந்தளவுக்கு பிடிச்சுது தெரிமா? மனம் திறந்த ஆசிரியர் 'பகவான்'!
மாணவர்களின் பாசப்போராட்டத்தால் இடமாறுதல் தடுத்து நிறுத்தப்பட்ட பள்ளி ஆசிரியர் பகவான் மாணவர்களுக்கு தன்னை ஏன் இந்தளவுக்கு பிடித்தது என மனம் திறந்துள்ளார்.
Recommended Video
திருவள்ளூர்: மாணவர்களின் பாசப்போராட்டத்தால் இடமாறுதல் தடுத்து நிறுத்தப்பட்ட பள்ளி ஆசிரியர் பகவான் மாணவர்களுக்கு தன்னை ஏன் இந்தளவுக்கு பிடித்தது என மனம் திறந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இவர் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவரது அயராத முயற்சியால் இந்த பள்ளி ஆங்கிலத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
மாணவர்களிடம் பாடத்தை தாண்டிய அக்கறை காட்டியதால் பகவானை மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த சூழ்நிலையில் பகவான், திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணிஇடமாறுதல் செய்யப்பட்டார்.
நெகிழ வைத்த மாணவர்கள்
இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர். பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்கிய பகவானை, வெளியே செல்ல விடாமல் அவர்கள் நடத்திய பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்தது.
இடமாறுதல் நிறுத்திவைப்பு
ஆசிரியரை கட்டி அணைத்தபடி மாணவ-மாணவிகள் கதறினர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதனையடுத்து ஆசிரியர் பகவானின் இடமாறுதல் ஆணையை 10 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.
ஊடகங்களில் செய்தி
மாணவர்களும் ஆசிரியர் பகவானும் கதறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களும் செய்தியாக வெளியிடப்பட்டது.
இடம்பிடித்தது எப்படி?
இந்நிலையில் மாணவர்கள் மனதில் இடம்பிடித்தது குறித்து ஆசிரியர் பகவான் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மாணவர்களின் செயல் ஆச்சரியமாக இருக்கிறது. நான் எனது பணியை தான் செய்தேன்.
நண்பனாக இருக்கிறேன்
எந்த மாணவர்களையும் திட்டியது இல்லை. ஒரு நண்பனாக இருந்து பாடம் நடத்தினேன். அதற்கு பிரதிபலனாக மாணவர்கள் இப்படி ஒரு அன்பை காட்டுவார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்காக மாணவர்கள் அழுதது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.
எனக்கும் விருப்பம் இல்லை
இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் வறுமையில் உள்ளவர்கள். மாணவர்களுக்கு நல்ல ஆசிரியராக பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. இவர்களை விட்டுச்செல்ல எனக்கும் விருப்பம் இல்லை. இருப்பினும் அரசு உத்தரவை ஏற்றுதான் ஆக வேண்டும்.
எட்டாக்கனியாக உள்ளது
எனக்கு நண்பர்களும், தமிழகத்தில் உள்ள சில அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர். பொறுப்பும், கடமையும் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில் கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் எட்டாக்கனியாக உள்ளது. என்னால் முடிந்த அளவு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு அளிப்பேன். இவ்வாறு ஆசிரியர் பகவான் தெரிவித்தார்.