'நானே உங்களை வரவேற்பேன்' - தினகரன் அணிக்கு முதல்வர் அனுப்பிய மெசேஜ்
அ.தி.மு.கவில் இணைய வருகிறவர்களை நானே நேரடியாக வரவேற்கிறேன் என தினகரன் அணியில் உள்ளவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை அ.தி.மு.கவில் இணைய வருகிறவர்களை நானே நேரடியாக வரவேற்கிறேன் என தினகரன் அணியில் உள்ளவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினகரன் ஆதரவாளர்களை அ.தி.மு.கவுக்குள் கொண்டு வருவதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்கென அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. ' அ.தி.மு.கவில் இணைய வருகிறவர்களை நானே நேரடியாக வரவேற்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மன்னார்குடியில், 'அம்மா அணி' என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார் திவாகரன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை வளைப்பதற்கும் அவர் முயற்சி செய்து வருகிறார். அப்படி வருகின்றவர்களுக்குத் தேவையான வசதிகளும் செய்து தரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தினகரன் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை, அ.தி.மு.கவுக்குக் கொண்டு வருவதற்கான பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் முதல்வர்.
எந்த உதவிகளும் இல்லை
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " தினகரன் அணியில் உள்ள ஒரு சில முக்கிய நிர்வாகிகள், அ.ம.மு.க ஏதோ செல்வாக்குமிகுந்த கட்சியைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். உண்மையில், அந்தச் சில நிர்வாகிகளும் தங்களுடைய சொந்தப் பணத்தைப் போட்டுத்தான் செலவு செய்கின்றனர். அவர்களுக்கு எந்தவித உதவிகளும் தினகரன் தரப்பில் இருந்து செய்யப்படுவதில்லை.
அமைச்சர்கள் தொடங்கியுள்ளனர்
அ.தி.மு.கவின் அடிப்படைத் தொண்டர்கள் அனைவரும் அவர்கள் பக்கம் இருப்பதுபோலச் சித்திரத்தை உருவாக்குகின்றனர். இப்படியே போனால், வரக் கூடிய தேர்தல்களிலும் டெல்டா பகுதிகளில் அ.தி.மு.கவின் அடிப்படை வாக்கு வங்கிக்கு வேட்டு வைப்பார்கள் என அமைச்சர்கள் கருதுகின்றனர். தவிர, டெல்டா உள்பட சில மாவட்டங்களில் தினகரன் அணியினர் வலுவாக உள்ளனர். இந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழக்கும் வேலைகளை அமைச்சர்கள் தொடங்கியுள்ளனர். அதன் ஒருபகுதியாக, தினகரன் அணியில் சிறப்பாக வேலை செய்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிவிளை ராஜேஷ் என்பரை அ.தி.மு.கவுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
நேரடியாக வரவேற்கிறேன்
இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நிர்வாகிகளைக் கொண்டு வரும் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை டெல்டா மாவட்ட அமைச்சர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் முதல்வர். இதுகுறித்து அந்த அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், ' அவர்கள் பக்கம் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை, அ.தி.மு.கவுக்குள் கொண்டு வாருங்கள். அப்படி யார் யாரெல்லாம் வருகிறார்களோ, அவர்களை எல்லாம் நானே நேரடியாகச் சென்று வரவேற்கிறேன். டெல்டாவில் நம்முடைய செல்வாக்கைத்தான் இவர்கள் சிதைக்கிறார்கள். இதற்குக் கடிவாளம் போட வேண்டியது அவசியம்' எனப் பேசியிருக்கிறார். வரும் நாட்களில் இணைப்பு மேளாக்களைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் முதல்வர்" என்றார் விரிவாக.
முதல்வர் எதிர்பார்க்கவில்லை
" கூட்டுறவு சங்கத் தேர்தலில், அ.தி.மு.க நிர்வாகிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரு சில இடங்களில் அ.ம.மு.கவினர் வந்துவிட்டார்கள். இதை முதல்வர் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக, கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கைவிடுத்தார். இதன்பின்னர், தினகரன் அணியினர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள், நிராகரிக்கப்பட்டன. ' உங்களை மீறி அவர்கள் எப்படி வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள்' என அமைச்சர்களைக் கடிந்து கொண்டார் முதல்வர். அடுத்து உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும்போது, 'தினகரன் ஆட்களால் சிக்கல்கள் வரலாம்' என்பதால்தான், அந்தப் பகுதியில் இருந்து நிர்வாகிகளை வளைக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளனர்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.