என் உயிருக்கு ஆபத்து: மதுரை ஆதினத்தின் உதவியாளர் வைஷ்ணவி புகார்
மதுரை ஆதீனத்தின் தனி உதவியாளர் வைஷ்ணவி. கடந்த ஓராண்டுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கும் பின்னரும் இவர் ஆதினத்தின் உதவியாளராக நீடித்து வருகிறார்.
இந்நிலையில், மதுரையில் சென்ட்ரல் சினிமா தியேட்டர் எதிரே உள்ள ஆதீனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் பீடா கடை நடத்தி வருபவர் பூபதி. இவரிடம், கட்டத்தை காலி செய்ய ஆதீனம் உத்தர விட்டார்.
இதன் பின்னர், ''கட்டிடத்தின் ஒப்பந்த பத்திரத்தை போலியாக தயாரித்து, எனது சகோதரன் கடையை எடுத்து நடத்தும்படி அவருக்கு எழுதிக்கொடுத்துள்ளார் ஆதீனத்தின் உதவியாளர்'' என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வைஷ்ணவி மீது புகார் கொடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார் வைஷ்ணவி.
இந்த சூழ்நிலையில் இன்று, பூபதியும், அவருடைய மாமனாரும், மாஜி சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டருமான தேவராஜனும் தன்னை மிரட்டியதாக கூறி, உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார் வைஷ்ணவி.
வெளியே வந்த வைஷ்ணவி, செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, "என் மீது பொய்யான புகாரை கூறி, வழக்கு பதிவு செய்தார் பூபதி. தற்போது அவர் என்னை மிரட்டி வருகிறார். ஆகவேதான் அவர் மீது புகார் கொடுத்தேன். இந்த வழக்கை விசாரிக்க சொல்லி, மதுரை விளக்குத்தூண் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார் கமிஷனர்''என்று தெரிவித்தார்.