மனசெல்லாம் நிறைஞ்சு வந்திருக்கேன்.. உற்சாகத்துடன் பேசும் நிர்மலா பெரியசாமி!
சென்னை: உண்மையிலேயே பெரும் மன நிறைவுடன் இங்கு வந்திருக்கிறேன். போயஸ் கார்டன் தோட்டத்தில் ஆட்டம் போடும் அத்தனை பேரையும் விரட்டியடிக்க வேண்டும் என்று நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.
சசிகலா குரூப்பிலிருந்து ஒவ்வொருவராக கழன்று கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் சி.ஆர். சரஸ்வதி, பா.வளர்மதி, கோகுல இந்திரா ஆகிய "முப்பெரும் தேவியருடன்" சண்டை போட்டு வெளியில் வந்த நிர்மலா பெரியசாமி ஓ.பி.எஸ். அணிக்கு வந்து விட்டார்.
நேற்று ஓ.பி.எஸ்ஸை சந்தித்து அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார் நிர்மலா பெரியசாமி. அதன் பின்னர் அவர் உற்சாகமாக செய்தியாளர்களிடம் பேசினார். அவரது பேச்சிலிருந்து:
குற்ற உணர்ச்சி இல்லை
உள்ளபடியே மனநிறைவுடன் வந்திருக்கிறேன். இனி எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் மக்களை என்னால் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன். விசுவாசம், பண்பு, அமைதிக்குரிய அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறேன்.
பண்பாளர் ஓ.பி.எஸ்.
ஒரு நல்ல பண்பாளரை கட்சிக்கு விசுவாசமாக உழைத்த அவரது மனதை புண்படுத்தி, துரோகி என்று தூற்றி வருகிறார்கள். ஜெயலலிதாவால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம் தான். ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அங்கம் வகித்த அவரை, ஜெயலலிதா இறந்தபிறகு துரோகி என்று பழிசொல்ல ஆரம்பித்தார்கள்.
உயிருடன் இருக்கும் வரை பேச முடிந்ததா
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை கட்சி அலுவலகம் பக்கமே வரமுடியாமல் முடங்கிக்கிடந்தவர்கள் எல்லாம், இன்றைக்கு ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? உண்மையான துரோகி யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
எதிரி இல்லையே என்றுதானே சொன்னேன்
அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை தரக்குறைவாக பேசினார்கள். அப்போது, அவர் நமக்கு எதிரி இல்லையே, அவரும் நமது கட்சிக்காரர் தானே என்று கருத்து தெரிவித்தேன். அதற்கு சி.ஆர்.சரஸ்வதி, குண்டுகல்யாணம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மிகவும் மோசமாக பேசிவிட்டார்கள்.
|
இறங்கிப் பேச நான் ரெடியா இல்லை
அவர்களுக்கு நிகராக எனது நிலைக்கு கீழே சென்று பேச நான் விரும்பவில்லை. எனவே வந்துவிட்டேன். நான் ஜெயலலிதாவால் அரசியலுக்கு வந்தேன். அவரால் பரிவோடும், பாசத்தோடும் வளர்க்கப்பட்டு கட்சி பணியாற்றினேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை எனும் 3 சகாப்தங்கள் தான் அதிமுகவின் ஆணிவேர்
அங்குள்ள பெண் நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை
அங்குள்ள பெண் நிர்வாகிகளுக்கு என்னை பிடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன? இந்த விவகாரத்தில் மர்ம முடிச்சுகள் அவிழ்வது எப்போது? என்று நான் உள்பட அனைத்து அ.தி.மு.க. உண்மை தொண்டர்களும் வேதனையுடன் காத்திருக்கிறோம்.
மனப் புழுக்கத்தில் உள்ளனர்
தற்போது அங்குள்ள 90 சதவீதம் பேர் மனப்புழுக்கத்தில் தான் உள்ளனர். இன்னும் நிறைய பேர் இங்கு வருவார்கள். ஆட்சியை கலைப்பது எங்கள் எண்ணம் அல்ல. ஜெயலலிதா எனும் மாபெரும் சக்தி இருந்தபோது கட்சியின் நிலைமை வேறு. இப்போதுள்ள நிலைமை வேறு. கட்சி காப்பாற்றப்படும் என்று நம்பிக்கையோடு தான் நான் அங்கே காத்திருந்தேன்.
இதுதான் உண்மையான அதிமுக
நடந்த சம்பவம் குறித்து அதிமுக தலைமை விளக்கம் கேட்டது. நானும் உரிய விளக்கம் அளித்தேன். எந்தவித குற்ற உணர்வும் எனக்கில்லை. மனசாட்சிப்படி முடிவு எடுத்துள்ளேன். இதுதான் உண்மையான அதிமுக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உண்மையான துரோகி யார்? என்பதை மக்கள் தெரிவிப்பார்கள்.
|
ஆட்டம் போடுவதை ஏற்க முடியாது
ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக களம் இறங்கும் அண்ணன் மதுசூதனன் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறுவார். அதேபோல ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாறவேண்டும். சம்பந்தமே இல்லாதவர்கள் அங்கு ஆட்டம் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் நிர்மலா பெரியசாமி.