என்னது என்னை பிடிக்க தனிப்படையா? எனக்கு தெரியவே தெரியாது.. சொல்கிறார் எச் ராஜா!!
தன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து தனக்கு தெரியாது என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
மயிலாடுதுறை: தன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து தனக்கு தெரியாது என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே அண்மையில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச் ராஜா உயர்நீதிமன்றத்தையும் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார்.
அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவும் வைரலானது.
2 தனிப்படைகள்
இதையடுத்து திருமயம் காவல்துறையினர் எச் ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எச் ராஜாவை கைது செய்ய 10 பேர் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருக்கடையூரில் எச் ராஜா
இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூரில் பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியானது குறித்து கேள்வி எழுப்பினர்.
எனக்கு தெரியாது
அதற்கு பதிலளித்த எச் ராஜா நான் தலைமறைவாகவில்லை என்றார். தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
கோவில்களில் கொள்ளை
தமிழக கோவில்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் 82% கொள்ளையடித்துள்ளனர். சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் உற்சவர் சிலைகளை காட்சிப்படுத்தினர். ஆனால் தாமிரபரணி புஷ்கரத்துக்கு சிலைகளை ஏன் அனுமதிக்கவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
உரிமையில்லை
ஆகம விதிகளை காரணம் காட்டி தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கரம் நடத்த தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். ஆகம விதிகளில் தலையிட இந்து அறநிலையத்துறைக்கு உரிமையில்லை என்றும் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்தார்.