நான் கட்டப் பஞ்சாயத்துக்காரனா.. நிரூபியுங்கள், ஒரு பக்க மீசையை எடுத்து விடுகிறேன்.. திருமா. ஆவேசம்
சேலம்: என்னைக் கட்டப் பஞ்சாயத்து செய்யும் தலைவர் என்று கூறுகிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் கூறியுள்ளார்.
ஓமலூரில் பெரும் பரபரப்பை ஓற்படுத்திய தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் கோகுல்ராஜ் உடல் அடக்கம் செய்யும் நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. அதில் திருமாவளவன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின்போது திருமாவளவன் பேசுகையில், பரமக்குடியில் லேசான தள்ளுமுள்ளுதான் நடந்தது. அதற்கு போலீஸாரை தாக்கிவிட்டார்கள் என்று சொல்லி துப்பாக்கிச் சூட்டில் 7 பேரை பலிகொண்டது போலீஸ். இப்படி இந்த ஒரு சம்பவத்திலும் தலித்துக்களை கண்டால் போலீசுக்கு அவ்வளவு வெறி வந்துவிடும்.
நம்முடைய பயணம் நெடுந்தூர பயணம், சட்டமன்றத் தேர்தலோடவோ பதவிகளோடவோ முடிந்துவிடுவதில்லை. இது மாற்றத்தை நோக்கிய பயணம். நேற்றைக்கு கூட ஒரு தலைவர் இன்ன சாதியால்தால் பிரச்சினை என்று திருமாவளவன் பேட்டி கொடுத்த பிறகுதான் கலவரமானது என்றார். கலவரம் வந்த பிறகு பேட்டிக்கொடுத்தேனா.. இல்லை, பேட்டி கொடுத்த பிறகு கலவரம் வந்ததா..? என்று திருப்பி கேட்டதற்கு பதிலில்லை.
நாங்கள் எந்த சாதிக்கும் மதத்துக்கு எதிரானவர்கள் இல்லை; கொடுமைகளை எதிர்க்கிறோம்... அவ்வளவு தான். எங்களை சாதிக்கட்சி என்று சுருக்கி விடப் பார்க்கிறார்கள். எங்கள் கட்சியில் எல்லா சமூகத்தினரும் இருக்கிறார்கள். கொடுமைகளுக்கு எதிராக போராடுவதால் திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என்கிறார்கள். நான் எந்த பஞ்சாயத்திலாவது இருந்தேன் என்று நிரூபித்தால் என் ஒரு பக்கம் மீசையை எடுத்துக்கொள்கிறேன். அதுமட்டுமில்லை, அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுகிறேன்
காதல் என்பது காலங்காலமா இருக்கு. எல்லா சமூகத்திலேயும்தான் இருக்கு. தருமபுரி இளவரசன் கொலையில் கூட உறவினர்களுக்கு ஒரு தொடர்பு இருந்தது. ஆனால், கோகுல்ராஜ் கொலையில் யுவராஜ் யாரென்றே தெரியவில்லை. அந்த மலைக்கு வரும் காதல் ஜோடிகளை கணக்கெடுத்து சாதிகளை விசாரிப்பதற்கென்றே ஒரு டீம் போட்டு வைத்திருக்கிறான். அங்கு உயர் சாதி பெண்களை தாழ்த்தப்பட்ட பையன்கள் அழைத்து வந்தால் மிரட்டுவதுதான் அவன் வேலையாக இருந்திருக்கிறது,
அப்படித்தான் கோகுல்ராஜை கடத்திச் சென்று மிரட்டி கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொள்ளப் போவது போல எழுதி கொடுத்து படிக்க வைத்து அதை வீடியோ எடுத்திருக்கிறார்கள். அதில் என் அம்மாவும், தம்பியும் நல்லா இருக்கணும் நான் என் அப்பா இருக்க இடத்துக்கே போறேன் என்கிறான் கோகுல்ராஜ். அவனுக்கு இருப்பதோ ஒரே அண்ணன் மட்டும்தான் அதை கூட தெரியாமல் எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள் முழுக்க சித்ரவதை செய்து தீவிரவாதிகள் கொலை செய்வதை போல் கொலை செய்திருக்கிறார்கள். அதை வீடியோ பதிவு செய்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தன் சமூகத்தில் தன்னை ஒரு தலைவராக அடையாளப்படுத்திக் கொள்வதற்கே யுவராஜ் இப்படி செய்திருக்கிறான். கோவிலில் சிசி டி.வி கேமரா இருந்தது அவர்களுக்கு தெரியவில்லை. போலீஸார் கோவில் பூசாரியிடம் விசாரிப்பார்கள் என்று யோசிக்கவில்லை, ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்தால் சடலம் ட்ராக் நடுவே கிடக்காது என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை, அத்தனை முட்டாள்கள் இவர்கள் என்றார் திருமாவளவன்.