ஜல்லிக்கட்டு: என் மீதான கண்டனங்கள் மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது- நடிகை திரிஷா
ஜல்லிக்கட்டுக்கு நான் எதிரானவள் அல்ல என கூறியுள்ளார் நடிகை திரிஷா. தம் மீதான கண்டனங்கள் மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது எனவும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார் திரிஷா.
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தம் மீதான கண்டனங்கள் மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது என்று நடிகை திரிஷா கவலை தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பில் திரிஷா உறுப்பினர் என்பதால் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. திரிஷா நடித்து வரும் கர்ஜனை படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
திரிஷாவின் படப்பிடிப்பை தமிழகத்தில் எங்கும் நடத்தவிடப் போவதில்லை என நடிகர் கருணாஸ் கொந்தளித்திருந்தார். சமூக வலைதளங்களிலும் திரிஷாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் திரிஷா ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் திரிஷா கூறியுள்ளதாவது:
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு இல்லை
கடந்த ஒரு வாரமாக நான் செய்யாத தவறுக்காக ஜல்லிக்கட்டு விஷயத்தில் என்னை மனம் நொந்து போகும் வகையில் விமரிசித்தும் கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல என்ற என்னுடைய நிலையை நான் மிக தெளிவாக சமூக வலைதளத்தில் என்னுடைய டிவிட்டர் பக்கம் முலமாக தெரிவித்து இருக்கிறேன்.
நான் ஒரு தமிழச்சி
நான் பிறப்பால் ஒரு தமிழச்சி, அதில் பெருமை அடைகிறேன். நான் தமிழ் சமுதாயத்தையும், எங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பெரிதும் மதிப்பவள்.
எதிர்மறை கருத்து இல்லை
நான் பிறந்த தமிழ் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு என்றுமே துணை நிற்பவள். என்றுமே என் வளர்ச்சிக்கு உரமும் ஆக்கமுமாய் இருந்த தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிர்மறை கருத்து கொண்டவள் அல்ல.
கீழ்த்தரமாக இருக்கிறதே..
என்னை புரிந்துக் கொள்ளாமல் என் மீது வீசப்படும் கண்டனங்கள், மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. அவை என்னை மட்டுமின்றி என்னை சார்ந்தவர்களையும் சொல்லொண்ணா துயரத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்துகிறது. இந்தக் கண்டனங்களை நான் எதிர்கொண்டு, என் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் அதேநேரத்தில், சில விஷமிகளால் என்னுடைய டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.
ட்விட்டரில் விஷமிகள்
அந்த விஷமிகள் என் ட்விட்டர் பக்கத்தின் வழியாகவே, நான் தமிழ் மக்களை பற்றி சொன்னதாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்தனர். இதன் மூலம் என்னை தமிழக மக்களிடம் இருந்து பிரிக்கும் எண்ணம் ஈடேறியதாக அவர்கள் எண்ணி இருக்கலாம்.
ஆதரவாளர்களுக்கு நன்றி
அது நடக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தாலும், பிரச்சினையின் வீரியத்தை கண்டு நானே என் பாஸ்வோர்டையும் மாற்றிவிட்டு, அதன் தொடர்ச்சியாக என் ட்விட்டர் பக்கத்தை, தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளேன். நான் இந்த கடிதத்தை தயார் செய்யும் வேளையில்கூட எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட வேண்டும்..? எனக்கு இந்த இன்னல்கள் ஏற்பட காரணகர்த்தாக்கள் யார் என்று யோசித்தவாரேதான் இருக்கிறேன். ஆயினும் இந்த சோதனையான காலக்கட்டத்தில் எனக்கு ஆதரவாய் இருக்கும் என் சக நடிகர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.