நான் ஒன்னும் டாக்டர் இல்லை.. என்ன காய்ச்சல்ன்னு எனக்கு தெரியாது.. பொறுப்பே இல்லாத திண்டுக்கல்!
தமிழகத்தில் என்ன காய்ச்சல் பரவுகிறது என்று தனக்கு தெரியாது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பழனி: தான் ஒன்றும் மருத்துவர் இல்லை, தமிழகத்தில் என்ன காய்ச்சல் பரவுகிறது என்று தனக்கு தெரியாது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொறுப்பே இல்லாமல் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 10 மரணங்களாவது ஏற்பட்டு விடுகிறது.
டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். டெங்குவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் பலன் அளிப்பது போல் தெரியவில்லை.
அணையை திறந்த அமைச்சர்
இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழநியில் பாலாறு பெருந்தலாறு அணையை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
என்ன காய்ச்சல்ன்னு தெரியாது
அப்போது டெங்கு காய்ச்சல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழகத்தில் பரவும் காய்ச்சல் என்னவென்று எனக்கு தெரியாது என்றார்.
நான் டாக்டர் இல்லை
மேலும் காய்ச்சல் பற்றி டாக்டர்கள் தான் பதில் தர வேண்டும் என்றும் அவர் கூறினார். நான் டாக்டர் இல்லை என்ற அவர் காய்ச்சல் குறித்து தனக்கு தெரியாது என்றார்.
திண்டுக்கல்லில் டெங்கு உயிரிழப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தையே நான் கூறுகிறேன் என்றும் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பில்லாத பேச்சால் அதிர்ச்சி
ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை, நாங்கள் பொய் சொன்னோம் என குண்டை தூக்கி போட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் தற்பொது டெங்கு காய்ச்சல் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.