இப்போ மட்டுமில்ல… எப்போவுமே நான் அரசியலுக்கு வரமாட்டேன்: திரிஷா
சென்னை: இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அரசியலில் இறங்கும் திட்டமில்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.
கமல், அஜித், விஜய், உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி மலையாள, தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளின் பல படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை கடந்த 15 வருடங்களாக தக்க வைத்து வருகிறார் நடிகை த்ரிஷா.
இந்நிலையில் த்ரிஷா அரசியலில் சேரவிருக்கிறார் எனவும், அதிமுக கட்சியில் இணைகிறார் எனவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
அரசியலில் நடிகைகள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் அரசியலில் களம் கண்டு வருகிறார்கள். குஷ்பு, ரோஜா, ஜெயப்பிரதா, ஹேமமாலினி உள்ளிட்ட பல நடிகைகள் பல்வேறு கட்சிகளில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
ஜெயலலிதா உடன் த்ரிஷா
இந்த நடிகைகள் வரிசையில் த்ரிஷாவும் அரசியலில் இறங்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இதற்குக்காரணம் இல்லாமல் இல்லை. தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவிடம் த்ரிஷா விருது வாங்குவது போன்ற புகைப்படத்தை மாற்றி இருந்தார்.
அதிமுகவில் த்ரிஷா
இதனால் பலரும் அதிமுக-வில் இணையப் போகிறார் த்ரிஷா என்று செய்திகள் ஊடகங்களில் வலம் வந்தன. பலரும் இது குறித்து கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
|
அரசியலுக்கு வரமாட்டேன்
இந்த செய்திக்கு த்ரிஷா மறுப்பு தெரிவித்திருக்கிறார். " சமீபத்தில் வெளியாகி இருக்கும் செய்திகள் போல நான் அரசியலில் எல்லாம் சேர திட்டமில்லை. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அந்த எண்ணம் எனக்கு கிடையாது" என்றும் உறுதியாக கூறியுள்ளார்.