சிவகாசி என்ன பாகிஸ்தானில் இருக்கா? நான் என்ன தீவிரவாதியா? கேட்கிறார் கார்த்திக்
மதுரை: சிவகாசிக்கு செல்ல விடாமல் போலீசார் எனக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். சிவகாசி என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது என்றும் நான் என்ன பயங்கரவாதியா என்றும் நாடாளும் மக்கள் கட்சித்தலைவரும் நடிகருமான கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனப் பட்டாசுகள் விவகாரத்தில் மத்திய அரசு அஞ்சுகிறது. நம்மை விட பலம் வாய்ந்த நாடு சீனா என இந்தியா கருதுவதே அச்சத்திற்குக் காரணம்' என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.
மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திக், நடிகர்களை எந்தக் கட்சிகளும் இழிவுபடுத்த வேண்டாம். நடிகர்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைக்கும் கட்சிகளுடன் விவாதிக்கத் தயார் என்றார்.
சீனா பட்டாசுகள்
சீனப் பட்டாசுகள் இந்தியாவிற்குள் வரக்கூடாது 2008ல் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இப்போதும் கன்டெய்னர்களில் சீனப் பட்டாசுகள் வந்துகொண்டிருக்கின்றன. வெளிநாட்டில் இருந்து பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதால் சிவகாசி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சிவகாசி பட்டாசுகள்
சிவகாசியில் 5 லட்சம் குடும்பங்கள் உள்ளன. பட்டாசுகள் விவகாரத்தில் சிவகாசி மக்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் என்று சொன்னேன். இந்த கேள்வி கேட்டது தப்பா?. கன்டெய்னர்களில் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவது உளவுத்துறைக்கு தெரியாதா? மத்திய அரசு, மாநில அரசுக்கு தெரியாமல் எப்படி இருக்கும்? சீனப் பட்டாசுகளின் ஊடுருவல் தொடர்ந்தது எப்படி?
நான் தீவிரவாதியா?
நான் தீவிரவாதியா? சிவகாசி செல்ல எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் தமிழன் இல்லையா? இந்தியன் இல்லையா? நான் பாஸ்போர்ட், விசா வாங்க வேண்டுமா? நான் பொறுமையாக சென்றுகொண்டிருக்கிறேன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
இந்தியா அஞ்சுவது ஏன்?
சீனப் பட்டாசுகள் விவகாரத்தில் மத்திய அரசு அஞ்சுகிறது. நம்மை விட பலம் வாய்ந்த நாடு சீனா என இந்தியா கருதுவதே அச்சத்திற்குக் காரணம். அதனால்தான் இன்னும் சீனப் பட்டாசுகளின் ஊடுருவல் தொடர்கிறது.
கச்சத்தீவு பிரச்சினை
எல்லை மீறி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதாக இலங்கை அரசு சொல்கிறது. கச்சத்தீவை ஏன் மீட்க முடியவில்லை? கச்சத்தீவை கொடுத்ததே தப்பு. கச்சத்தீவை மீட்பதாக கூறிய யாரும் இதுவரை மீட்கவில்லை. கச்சத்தீவு குறித்து பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கக்கூடாது. ஒடுக்கி ஆளும் அரசியல் மாற வேண்டும்'' என்று கார்த்திக் கூறியுள்ளார்.