அமிதாப்புக்காக பிரார்த்திக்கும் ரஜினி.. குரங்கணி துயரத்திற்கு வருந்த முடியாமல் போனது ஏன்?
அமிதாப் உடல்நிலை நலம் பெற பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அரசியல் பேசமாட்டேன்... ஆனால் பாஜக தலைவர்களை சந்திப்பேன்; அமிதாப் உடல்நிலை பாதிப்புக்கு பிராத்திக்கிறேன்... ஆனால் குரங்கணியில் கருகி மரித்த உயிர்களைப் பற்றியோ திருச்சி உஷா மரணம் குறித்து பேசமாட்டேன் என்பதுதான் ரஜினிகாந்தின் 'ஸ்டைலிஷ்' கொள்கை.
அரசியலுக்கு வருகிறேன் என இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். எம்ஜிஆர் போல நல்லாட்சி தருவேன் என பிரகடனம் செய்ததும் ரஜினிகாந்த்தான்.
அதேசமயம், இன்னமும் நான் முழு நேர அரசியல்வாதியாகவில்லை என்று பேசி தெளிவாக குழப்புகிறார் ரஜினி. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்; வெற்றிடத்தை நிரப்பவே வந்திருக்கிறேன், நல்லாட்சி தருவேன், எம்ஜிஆர் ஆட்சி தருவேன் என்பதெல்லாம் ஒரு அரசியல்வாதியின் பேச்சு இல்லையோ என சாமானிய மக்களுக்கு சத்தியமாக புரியவில்லை.
பாஜக தலைவர்களுடன் சந்திப்பு
திருச்சி உஷா, சென்னை அஸ்வினி கொலைகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டால், ஆன்மீக பயணமாக வந்திருக்கிறேன். அரசியல் வேண்டாம் என தலைதெறிக்க தப்புகிறார். ஆனால் பாரதிய ஜனதா தலைவர்களை கட்டியணைத்துக் கொள்கிறார். இதை என்னவென்று புரிந்து கொள்வது?
அமிதாப்புக்காக பிரார்த்தனை
டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமிதாப்பச்சான் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்; அவருக்காக பிரார்த்திக்கிறேன் என உருகி இருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் குரங்கணியில் மரித்து போன உயிர்களுக்காக ஒரு சிறு இரங்கல் கூட தெரிவிக்க மனசு வரவில்லை ரஜினிக்கு என்பது ஆச்சரியமாக உள்ளது.
இரங்கலுக்கு அனுமதிக்காதா?
ஆன்மீக பயணம் போன இடத்தில் அரசியல் பேச மாட்டேன் என்று ரஜினி சொல்வதை ஏற்றுக் கொண்டாலும் கூட குரங்கணி சம்பவம் அரசியலா என்ற கேள்வி எழுகிறது. பரிதாபகரமான சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கக் கூட அவரது ஆன்மீக பயணம் அனுமதிக்காதா? பாஜக தலைவர்களை சந்திக்கலாம்.. அமிதாப் உடல்நிலை பற்றி பேசலாம். ஆனால் தமிழகத்து நிகழ்வுகள் எதைப் பற்றியும் பேசமாட்டேன் என்பதுதான் ரஜினிகாந்தின் கொள்கை என்றால் மக்களை ரஜினி எதிர்கொள்வது கஷ்டமாகி விடும்.
இவர்தான் தமிழகத்தை ஆளப் போறாரு...
இவர்தான் தமிழகத்தை ஆளப் போற "பச்சைத் தமிழன்" என்று 'ஆட்சேர்ப்பு' முகாம்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர் பரிதாபத்துக்குரியவர்கள் சிலர்.