தனிக்கட்சி தொடங்குவீர்களா.. தினகரன் சொன்ன பதில் இதுதான்!
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் போட்டியிட தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் போட்டியிட தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தனிக்கட்சி தொடங்குவீர்களா என்ற கேள்விக்கு தினகரன் சிரித்தபடியே பொறுத்திருங்கள் மழுப்பலாக பதிலளித்தார் தினகரன்.
ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரான டிடிவி தினகரன் சட்டசபை கூட்டத்தொடரில் முதல் முறையாக பங்கேற்று வருகிறார். ஆனால் தனக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறி வெளிநடப்பு செய்து வருகிறார்.
நேற்று கூட்டத்தில் இருந்து வெளியேறிய தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை சரமாரியாக விளாசினார்.
தினகரன் வெளிநடப்பு
இந்நிலையில் இன்றும் கூட்டத்தில் இருந்து டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
தனிக்கட்சி தொடங்குவீர்களா?
அப்போது உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் போட்டியிட தயார் என அவர் கூறினார். இதைத்தொடர்ந்து தனிக்கட்சி தொடங்குவீர்களா அல்லது சுயேச்சையாக போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பினர்.
சிரித்தபடியே மழுப்பல்
அதற்கு சிரித்தபடியே பதிலளித்த தினகரன் பொறுத்திருங்கள் என்று மழுப்பலாக கூறினார். முன்னதாக தினகரன் பேரவை தொடங்கப்போவதாக தகவல் வெளியானது.
தினகரன் தரப்பு மறுப்பு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி வழங்கும் நோக்கில் பேரவை தொடங்கவுள்ளது என கூறப்பட்டது. ஆனால் இதனை தினகரன் தரப்பு மறுத்தது குறிப்பிடத்தக்கது.