முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ்சை அழைக்காததால் நெருடல்.. ஆளுநரை சந்தித்த பிறகு மைத்ரேயன் பரபர பேட்டி
சென்னை: ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை அதிமுக எம்.பி. மைத்ரேயன் இன்று திடீரென சந்தித்து பேசினார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பிறகு மைத்ரேயன் அளித்த பேட்டி: டிச.21இல் நடைபெற உள்ள தமிழிசை சங்கத்தின் 75வது ஆண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக ஆளுநரை சந்தித்தேன். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு.
மதுரை முப்பெரும் விழா நடத்தப்பட்டது எங்களுக்கு சற்று நெருடலாகத்தான் உள்ளது. எங்களுக்கு தகவல் கொடுக்காமல் நடத்தப்பட்டது ஆதங்கமாக உள்ளது.
இனிமேல் நடக்க கூடாது
பழைய விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். முப்பெரும் விழாவிற்கு கட்சியில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும்.
எம்பி, எம்எல்ஏக்களுக்கே அழைப்பு இல்லை
மதுரையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. மதுரை சட்டசபை தொகுதி உறுப்பினர் சரவணனுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இவர்கள் இருவரும் பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர்கள். இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். வருங்காலம் வசந்தகாலமாக இருக்க வேண்டும்.
ஒற்றுமையே வலிமை
இனிமேல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஆர்.கே.நகரில் மாபெரும் வெற்றி பெற வேண்டும். மீதமுள்ள மூன்றரை ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே உணர்வுள்ள அதிமுக தொண்டர்கள் கருத்து. ஆர்.கே.நகரில் அதிமுக வெல்லும். 2வது இடம் திமுகவுக்கா, தினகரனுக்கான என்பதை தீர்மானிக்கவே தேர்தல். அவர்கள் டெபாசிட் பெறுவார்களா என்பதும் கேள்விக்குறிதான்.
யாராலும் முடியாது
அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்தால், யாராலும் தோற்கடிக்க முடியாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேட்சை வேட்பாளர் தான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக ஆதரவளிக்குமா என்பது குறித்து கவலையில்லை. ஏனெனில் அதிமுகதான் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி. இவ்வாறு மைத்ரேயன் தெரிவித்தார்.