இளம் வயதில் நான் கிறிஸ்தவத்திற்கு மாறினேன்... பா. ரஞ்சித்
சென்னை: தாம் இளவயதில் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியதாகவும் ஆனால் தற்போது தமக்கு கடவுள், மதநம்பிக்கை எதுவும் இல்லை என்றும் கபாலி பட இயக்குநர் பா. ரஞ்சித் கூறியுள்ளார்.
"அந்திமழை" மாத இதழுக்கு அளித்துள்ள விரிவான பேட்டியில் இது தொடர்பாக பா. ரஞ்சித் கூறியுள்ளதாவது:
கேள்வி: ரஞ்சித் யார்? எங்கிருந்து வந்தீர்கள். உங்கள் பயணத்தின் துவக்கம், பாதை இவற்றை பகிர்ந்துகொள்ள முடியுமா?
பதில்: நான் கரலப்பாக்கத்தைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பம் அங்குள்ள கீழ்க்கொண்டையார் காலனியில் இருந்தது. இப்போது அதற்கு அம்பேத்கர் நகர் என்று பெயர். அப்பா பாண்டுரங்கன், அம்மா குணவதி, அண்ணன் பிரபு தம்பி சரவணன். எங்கள் ஊரில் ஐம்பது அறுபது தலித் குடும்பங்கள் உண்டு.
தள்ளேறி என்றழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் வேலையில் இருந்தார் தாத்தா. அங்குள்ள பள்ளியில்தான் படித்தேன். பாண்டீஸ்வரம், வெங்கலூர், ஆவடி என்று மாறி மாறிப் படித்தேன்.
நான் ஏழாவது படிக்கும்போது முதன்முறையாக ஒரு நாடகம் நடித்தேன். எனக்கு அப்போது நடிப்பு சுத்தமாக வரவில்லை. ஆகவே நடனமாடச் சொனார்கள். 'ஆட்டமா பாட்டமா' பாட்டுக்கு ஒன்ஸ்மோர் கேட்கும் அளவுக்கு குழுவினரில் ஒருவனாக ஆடினேன். அதுதான் என் முதல் மேடை நிகழ்கலை அனுபவம்.
என் இரண்டு மாமாக்களும் ஓவியர்கள். அவர்களின் பெயிண்ட், பிரஷ் போன்றவற்றைத் திருடி எடுத்துவந்து வைத்து வரைந்து பார்ப்பேன். என் அப்பா என் ஓவிய முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருந்தார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஊரில் ஒரு திருவிழாவில் போடுவதற்காக நாடகம் எழுதினேன். ஒத்திகை எல்லாம் பார்த்தாயிற்று. ஆனால் ஊரில் ஒரு பிரச்சனையாகி நாடகம் மேடையேறாமல் போனது. நாடகம் எப்படி வருமோ என்று பயந்துகொண்டிருந்த எனக்கு அது இல்லை என்றவுடன் கொஞ்சம் நிம்மதியானது. ஆனாலும் நாடகம் எழுதியது அதுவே முதல்முறை. அப்போதெல்லாம் சினிமாவுக்கு வரப்போகிறேன் என்று தெரியாது.
ஆனால் இயக்குநர்களின் பேட்டிகள் எனக்குப் பிடிக்கும். 'நாமும் இயக்குநரானால் இப்படியெல்லாம் பேசலாம்' என்று நினைத்துக்கொள்வேன்.
இளம் வயதில் தனியே அமர்ந்து எதையாவது யோசித்துக்கொண்டிருப்பதை வழக்கமாக்கி இருந்தேன். என் அம்மா கூட 'மூலையில் முட்டை போட்டுக்கிட்டிருக்காதடா' என்று சொல்வதுண்டு. அந்த சமயத்தில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினேன். தனியாக அமர்ந்து கிறிஸ்தவ பாடல்களை எழுதுவேன்.