அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நானும் பார்க்கவில்லை - திருமாவளவன்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை தானும் பார்க்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை தானும் பார்க்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் நாள்தோறும் ஒவ்வொரு தகவலை தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவை ஒரு நாள் கூட மருத்துவமனையில் சந்திக்கவில்லை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.
ஆனால் அமைச்சர்கள் நிலோபர் கபில் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்ததாக தெரிவித்தனர். அமைச்சர்களின் இந்த முரணான கருத்தால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் வலுத்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவை மருத்துவமனையில் தானும் சந்திக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் இதனை தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரையை மட்டுமே சந்தித்து பேசினோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
தமக்கு கட்டுப்படாதவர்கள் மீது வருமானவரித்துறையை மத்திய பாஜக அரசு ஏவிவிடுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே ஆளுநர், பாஜக தலைவர் அமித்ஷா, ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் திருமாவளவனும் தான் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என கூறியிருப்பது ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.