ஜெ.வின் கைரேகை பெற எழுத்துப்பூர்வமான ஆவணம் ஏதும் வரவில்லை- மருத்துவர் பாலாஜி
ஜெயலலிதாவின் கைரேகையை பெற எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் வரவில்லை என்று மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவிடம் இருந்து கைரேகையை பெற முதல்வர், தலைமை செயலாளர் ஆகியோரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் வரவில்லை என்று மருத்துவர் பாலாஜி புது தகவலை தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனிடம் விசாரிக்குமாறு கோரி இருந்தார்.
அதன்பேரில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது இடைத்தேர்தலுக்காக அவருடைய கைரேகை பதிவு செய்யப்பட்ட போது உடன் இருந்த டாக்டர் பாலாஜிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 7 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று 3-ஆவது முறையாக மருத்துவர் பாலாஜி விசாரணை கமிஷன் முன்பு ஆஜரானார். அப்போது அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து கைரேகை தொடர்பாக பாலாஜி புது தகவலை தெரிவித்துள்ளார்.
முந்தைய இரு முறை நடத்தப்பட்ட விசாரணையில் ஜெயலலிதாவின் கைரேகை தனது முன்னிலையில் தான் பதிவு செய்யப்பட்டதாகவும், அப்போது அவர் சுயநினைவோடு இருந்ததாகவும், கையெழுத்து போட முடியாததால் கைரேகை பதிவு செய்தார் என்றும் பாலாஜி கூறி இருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் கைரேகை பெறுவது தொடர்பாக முதல்வர், தலைமை செயலாளர் ஆகியோரிடம் இருந்து எழுத்துப்பூர்வ ஆவணம் ஏதும் வரவில்லை.
சுகாதார துறை செயலாளரின் வாய் மொழி உத்தரவின் பேரிலேயே தான் கைரேகை பெற்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.