இந்துக்கள் மனம் புண்படும்படி பேசவே இல்லை .. மோகன் சி லாசரஸ் விளக்கம்
இந்து மதத்தை புண்படும்படி பேசவில்லை என மோகன் சி லாசரஸ் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி: எனது உடன் பிறந்த சகோதரர்களும் இந்து மத்தில்தான் உள்ளனர் என்றும், இந்து மதத்துக்கு எதிராக நான் எதுவுமே பேசவில்லை என்றும் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தினை அவர் வாட்ஸ்அப் வீடியோ மூலம் தெரிவித்து இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மோகன் சி.லாசரஸ் பிரபலமான கிறிஸ்தவ மத போதகர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இவர் மீது பரபரப்பு புகார் ஒன்று பாஜக மற்றும், விஎச்பி நிர்வாகிகள் சார்பாக சூலூர், கோவை கருத்தம்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட காவல்நிலையங்களில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.
புண்படுத்தி விட்டார்
அந்த புகார் மனுக்களில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் "ஹிந்து கடவுள்களை சாத்தான்கள், ஹிந்து ஆலயங்களை சாத்தான்களின் அரண்கள் என்றும் இந்தியாவிலேயே அதிகமாக சாத்தான்களின் அரண்கள் உள்ள இடம் தமிழகம்தான் என்றும் மோகன் சி லாசரஸ் சொல்லி இருக்கிறார்.
நடவடிக்கை வேண்டும்
ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளான யாகங்கள் வேள்விகளை கேலிசெய்யும் விதமாகவும் அவர் கூறியதுடன், இது தொடர்பான வீடியோக்களையும் சமூகவலைளதங்களிலும் பதிவிட்டு வருகிறார். எனவே இந்துமத கோவில்களையும் இழிவாகவும் தரக்குறைவாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பேசி வரும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.
வாட்ஸ்அப் வீடியோ
இந்த புகார்களின் அடிப்படையில் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு
மோகன் சி லாசரஸை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், மோகன் சி லாசரஸ் ஒரு வீடியோவை வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளர். அதில் தன் தரப்பு விளக்கத்தையும் அளித்துள்ளார்.
இப்படி பேசியதே இல்லை
இதில் அவர் "இந்து தெய்வங்களை பற்றியோ, மதத்தை பற்றியோ நான் இழிவுப்படுத்தி பேசவில்லை. சர்ச்சைக்குரிய அந்த காட்சி எப்பொழுது பேசியது என அதில் கூறப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் இப்படியெல்லாம் நான் பேசியதே இல்லை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் "இந்தியாவின் நம்பிக்கை, வேதம்" என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய காட்சிதான் அது.
இழிவுபடுத்தவே இல்லை
ஆனால் அதில் உள்ள சில வார்த்தைகளை மட்டும் வைத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது. எனது உடன் பிறந்த சகோதரர்களும் இந்து மதத்தில்தான் உள்ளனர். அவர்களிடம் கூட இதுவரை நான் தவறுதலாக பேசியதில்லை. என்னிடம் ஏராளமான இந்து மதத்தினர் பிரார்த்தனைக்காக வருகின்றனர். எனவே இந்து மதத்தை நான் இழிவுபடுத்தி பேசவில்லை" என்று தெரிவித்துள்ளார்.