சுவாதியை யார் என்றே எனக்கு தெரியாது என்கிறார் ராம்குமார்: வக்கீல் பரபரப்பு தகவல்
சென்னை: சுவாதியை தனக்கு யார் என்றே தெரியாது என ராம்குமார் தன்னிடம் கூறியதாக, அவரது வழக்கறிஞரான ராம்ராஜ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வாலிபர் ஒருவரால் சுவாதி என்ற இன்போசிஸ் ஊழியர் வெட்டி கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த இளைஞரான ராம்குமார். தற்போது, 15 நாள் நீதிமன்ற காவலின்கீழ், அவர் புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் குழு
ராம்குமாரை வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் மார்க்ஸ் ரவீந்திரன், மனோகரன், மரிய ஜான்சன் உட்பட 8 பேர் நேற்று மாலை சந்தித்துப் பேசினர்.
தெரியாது
சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. சிறைக்கு வெளியே வந்த பிறகு நிருபர்களிடம் இந்த சந்திப்பு குறித்து ராம்ராஜ் கூறியதாவது: ராம்குமாரை சந்தித்து பேசியபோது, எனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சுவாதியுடன் நான் பழகவில்லை. சுவாதி யார் என்றே எனக்கு தெரியாது என ராம்குமார் தெரிவித்தார்.
கழுத்தை அறுத்தனர்
மேலும், சொந்த ஊரில் வீட்டுக்குள் இருந்தபோது, ஒரு சிலர் ஓடி வந்து என் கழுத்தை பிடித்து அறுத்தனர். அப்போது ஊரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
மிரட்டி வாக்குமூலம்
இருட்டில், என் கழுத்தை அறுத்தது யார் என்று கூட என்னால் பார்க்க முடியவில்லை. பேசமுடியாத நிலையில் இருந்த போது என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கியதுடன் கையெழுத்தும் வாங்கி கொண்டனர் என்று ராம்குமார் தெரிவித்தார்.
ஆதாரங்கள் இருக்கிறது
ராம்குமார் நிரபராதி என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் நிறைய உள்ளது. செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், ராம்குமார் மன உளைச்சலோடு காணப்படுகிறார். அவருக்கு உரிய சிகிச்சை அவசியம். இவ்வாறு ராம்ராஜ் தெரிவித்தார்.
பழக்கம் உண்டா?
சுவாதியுடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு, ராம்குமார் சென்னை வந்ததாகவும், காதலை ஏற்க வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் இருந்து, சுவாதி வேலை செய்யும் இடம்வரை ராம்குமார் பின்தொடருவது வழக்கம் எனவும் தகவல் வெளியான நிலையில், ராம்குமார் வக்கீல் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.