ஸ்டாலின் என்ன சொன்னார், எனக்குத் தெரியாது... சந்தீப் சக்சேனா
ராமேஸ்வரம்: தமிழக வாக்காளர் பட்டியலிலிருந்து உயிருடன் உள்ள திமுகவினரை நீக்கி விட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புகார் கூறியிருப்பது குறித்து எனக்குத் தெரியாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்திற்கு தனது குடும்பத்தினருடன் இன்று சாமி கும்பிட வந்தார் சந்தீப் சக்சேனா. அப்போது தமிழகத்தில் எப்போது சட்டசபை பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு சக்சேனா பதிலளிக்கையில், தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்றார்.
உயிருடன் உள்ள திமுகவினரை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களது பெயரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் புகார் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அதுகுறித்து எனக்குத் தெரியாது என்று பதிலளித்தார் சக்சேனா.