அநாகரிகமான, தரக்குறைவான வார்த்தைகளை நான் பேசியதே இல்லை.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
அதிமுக முன்னாள் அமைச்சரான வளர்மதி தான் அநாகரிகமான தரக்குறைவான வார்த்தைகளை பேசியதே இல்லை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அடித்துக் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரான வளர்மதி தான் அநாகரிகமான தரக்குறைவான வார்த்தைகளை பேசியதே இல்லை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அடித்துக் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரான வளர்மதிக்கு தமிழக அரசு அண்மையில் பெரியார் விருதை வழங்கியது. தீச்சட்டி தூக்கும் வளர்மதிக்கு எதற்கு பெரியார் விருது என சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இடம்பெறும் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரான வளர்மதி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பெரியார் விருதை பெற தனக்கு தகுதி உள்ளது என்றார்.
மக்கள் நலனுக்கு இணக்கம்
மேலும் மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்கள் நலன் பாதுகாக்கப்படும் என்றார். தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடனான இணக்கம் தேவை என்றும் அவர் கூறினார்.
மறுபரிசீலனை செய்யவேண்டும்
மத்திய அரசின் சில கருத்துக்களை எதிர்ப்போம் சில கருத்துக்களை ஆதரிபோம் என்றும் அவர் கூறினார். தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சனைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.காவிரி பிரச்சனை, ஹஜ் மானியம், நெடுவாசல், நீட் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்காலம் பிரகாசமாக உள்ளது
அதிமுக எதிர்காலம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த வளர்மதி பிரகாசமாக உள்ளது என்றார். தினகரனை விமர்சிக்கும் அளவுக்கு சசிகலாவை யாரும் விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த வளர்மதி, சசிகலா ஒரு பெண் என்பதால் அவர் குறித்து யாரும் விமர்சனம் செய்வதில்லை என்றார்.
ஜெ. ரத்தம் உறிஞ்சிய ஓநாய் கூட்டம்
அப்போது ஜெயலலிதாவின் ரத்தத்தை குடித்த ஓநாய் கூட்டம் என சசிகலா குடும்பத்தை வளர்மதி பேசியது குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதில் ஓநாய் கூட்டத்தில் சசிகலா இல்லையா என்று கேட்டு தொடர்ந்து வளர்மதி பேசிய வீடியோவையும் போனில் காண்பித்தார் நெறியாளர். அதை கேட்பதற்குள்ளேயே அது தன்னுடைய குரல் இல்லை என்றார் வளர்மதி.
ஈசியாக செட்டப்
தனது போட்டோவை வைத்து வேறு ஒருவரின் குரலை பயன்படுத்தி இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதுபோன்று ஈசியாக செட்டப் செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அநாகரிகமான பேசியதில்லை
தான் அப்படி பேசவில்லை என்றும் இந்த வீடியோவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் என்றும் விடாபிடியாக பேசினார் வளர்மதி. தான் ஒருபோதும் தரக்குறைவான அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை என்றும் அவர் அடித்துக்கூறினார்.
வேற கேள்வி கேட்கிறீங்களா?
தொடர்ந்து நெறியாளர் இதுகுறித்து கேள்வி எழுப்பவே, வேறு கேள்வி கேட்கிறீர்களா என கோபத்துடன் கேட்டார் வளர்மதி. சசிகலா மீது உள்ள மரியாதை அவர் பெண் என்பதால் தானே தவிர, கட்சிக்கு தலைமை ஏற்க அல்ல என்றும் வளர்மதி திட்டவட்டமாக கூறினார்.