திமுகவிலிருந்து விலகலா?.. வதந்தி என்கிறார் குஷ்பு....!
சென்னை: வதந்திகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரம் இல்லை என்று தான் திமுகவிலிருந்து விலகப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளுக்குப் பதிலளித்துள்ளார் நடிகை குஷ்பு.
கடந்த 2010ம ஆண்டு திமுகவில் இணைந்தவர் குஷ்பு. அதன் பி்ன்னர் கட்சியில் முக்கியமான இடத்தில் அவர் வைக்கப்பட்டிருந்தார். பிரசாரக் கூட்டங்களில் அவர் முதன்மைப்படுத்தப்பட்டார்.
தமிழகத்தில் பல முக்கிய திமுக கூட்டங்களிலும், பிரசாரங்களிலும் குஷ்பு பேசியுள்ளார். இந்த நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மு.க.ஸ்டாலின் அதைத் தடுத்துவிட்டதாக கூறுகிறார்கள். மேலும் குஷ்புவை பிரசாரத்திற்கு அழைக்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் கூறி விட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இதனால் குஷ்பு பிரசாரத்திற்கு இதுவரை போகவில்லை. மு.க.ஸ்டாலின் மட்டுமே பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான் குஷ்பு டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும், அவர் கட்சியை விட்டு விலகப் போவதாகவும், பாஜக அல்லது ஏதாவது ஒரு தேசியக் கட்சியில் இணைய அவர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ஒரு நாளிதழுக்கு குஷ்பு கொடுத்த விளக்கத்தில், வதந்திகளுக்குப் பதில் கொடுக்க எனக்கு நேரம் இல்லை என்று கூறியுள்ளார் குஷ்பு.