யாருக்கிட்ட.. நாங்கல்லாம் சிங்கம்,புலியவே பாத்தவங்க.. நண்ட பார்த்து பயமில்லை.. அசராத ஜெயக்குமார் !
சிங்கம் புலி உள்ளிட்டவற்றை பார்த்து அரசியலுக்கு வந்த தங்களுக்கு நண்டை பார்த்து பயமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிங்கம் புலி உள்ளிட்டவற்றை பார்த்து அரசியலுக்கு வந்த தங்களுக்கு நண்டை பார்த்து பயமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தி பெண் ஒருவர் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டருகே நண்டு விடும் போராட்டத்தை நடத்தினார். அப்போது பேசிய அவர் நண்டு போல் மீனவர்களும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக நான் நண்டு விடும் போராட்டம் நடத்தினேன் என்றார்.
மேலும் மீனவர்களுக்காக அறிவித்த திட்டங்களை அமைச்சர் ஜெயக்குமார் வேகமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நான் அடுத்தபடியாக ஆமை விடும் போராட்டம் நடத்தவுள்ளேன் என்றார். இதைத்தொடர்ந்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
நண்டு விடும் போராட்டம்
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அவரது பேசியதாவது, என் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்துகின்றனர்.
சிங்கம் புலியுடன் வாழ்ந்திருக்கிறேன்
ஆனால் நான் சிங்கம், புலி, கரடி, பல்லி, பூரான் உள்ளிட்டவற்றை பார்த்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். வனத்துறை அமைச்சராக இருந்த போது சிங்கம் புலியுடன் வாழ்ந்திருக்கிறேன்.
நண்டுக்கு பயப்படமாட்டேன்
அனைத்திற்கும் துணிந்து தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். நண்டை பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
அவையில் சிரிப்பலை
இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 2002ல் ஜெயக்குமார் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, தேனியில் சிங்கம் மற்றும் புலியை பார்த்தார் என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
நகைச்சுவை பேச்சு
கடந்த சில நாட்களாக சட்டசபையில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் நகைச்சுவையாக பேசி அவ்வப்போது சிரிப்பலையை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.