‘பால்... பழம்’ பற்றி அழகிரி எதுவும் கூறவில்லை... மதுரை போலீசில் ஆதரவாளர்கள் புகார்
மதுரை: மு.க.அழகிரி பெயரை பயன்படுத்தி இணையதளத்தில் அவதூறு பிரச்சாரம் செய்யப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி போன்றவை முயற்சித்து வருகின்றன. ஆனால், யாருடன் கூட்டணி என்பதில் தேமுதிக தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, திமுக - தேமுதிக கூட்டணி முயற்சி குறித்து, பழம் நழுவி பாலில் விழும் என மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.
கருணாநிதியின் இந்தக் கருத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்திருந்தார். வைகோவைப் போலவே திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி விமர்சித்ததாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பரவியது.
ஆனால், அது அழகிரி கூறியது இல்லை என்றும், தவறான தகவல் அவரது பெயரில் பரப்பப்படுவதாகவும் அழகிரி சார்பில் அவரது ஆதரவாளர்களான வக்கீல் மோகன்குமார், முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன், கோபிநாதன், எம்.எல்ராஜ் ஆகியோர் மதுரை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் பாண்டே கங்காதரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் அழகிரி கூறியிருப்பதாவது:-
பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் எனது பெயரில் தி.மு.க. தொடர்பாக அழுகிய பழம் என்ற கருத்தும், கேலிச்சித்திரமும் வெளி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணைய தளங்களை நான் எப்போதும் பயன்படுத்துவது கிடையாது. அதில் எனது பெயரை பதிவு செய்யவில்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக யாரோ சிலர் எனது பெயரை கெடுக்கும் வகையில் இதுபோன்ற விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களில் எனது பெயரில் எந்த கணக்கும் இல்லாத நிலையில் எனது பெயரில் கேலிச்சித்திரம், கருத்துக்கள் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும்.
எனவே மேற்கண்ட குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு எனக்கு அவதூறு விளைவிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.