சியாச்சின் பனிச்சரிவில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்: ஸ்டாலின்
சென்னை: சியாச்சின் பனிச்சரிவில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செய்து அஞ்சலி செலுத்துவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சியாச்சின் பகுதியில் கடந்த 3-ந் தேதியன்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் சிக்கி வீரமரணம் அடைந்தனர். அதில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக ஸ்டாலின் முகநூலில் பதிவு செய்துள்ளது:
சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள செய்தியை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையின்படி அங்கு இறந்த 10 ராணுவ வீரர்களில் 4 வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்திய நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது தங்கள்இன்னுயிரை இழந்துள்ள தமிழக வீரர்களான லான்ஸ் ஹவில்தார் குமார் (தேனி மாவட்டம்), ஹவில்தார் எழுமலை (வேலூர் மாவட்டம்), சிப்பாய் கணேசன் (மதுரை), சிப்பாய் ராமமூர்த்தி (கிருஷ்ணகிரி மாவட்டம்) ஆகியோருக்கும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் சூர்யவன்ஷி, சுதீஷ், நாகேஷா, மகேஷா, ஹனமந்தப்பா, முஷ்டாக் அஹமது ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டைப் பாதுகாக்கும் மகத்தான பணியில் உயிரிழந்துள்ள அந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செய்து, அஞ்சலி செலுத்துகிறேன்.. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்...