என் மீதான தாக்குதல் குறித்து பிரதமரிடம் தெரிவிப்பேன்- தீபா
சென்னை: என் மீதான தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிப்பேன் என்று தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். எனினும் சசிகலாவின் சொந்தக்காரர்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் போயஸ் கார்டன் தனக்கு தான் சொந்தம் என்று கூறிக் கொண்டு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்துக்கு வந்தார்.
மேலும் கார்டனுக்குள் நுழைய முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உள்ளே சென்ற அவரை தினகரனின் குண்டர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தீபா தாக்கப்பட்டதை அடுத்து கணவர் மாதவனுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார்.
அப்பகுதியில் தீபா, மாதவனின் ஆதரவாளர்களும் குவிந்து வருகின்றனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பின்னர் வெளியே வந்த தீபா கூறுகையில், அதிமுகவை சசிகலாவிடம் இருந்து காக்க வேண்டும்.
தீபக் அழைத்ததால்தான் நான் அங்கு சென்றேன். என்னை அங்கிருந்த சசிகலா, தினகரனின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். நான் வரும்போது போலீஸே இல்லை. இந்த தாக்குதல் குறித்து நிச்சயம் பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் தெரிவிப்பேன் என்றார்.