விஷ்ணு பிரியா தற்கொலையும்… விடை தெரியாத கேள்விகளும்…
நாமக்கல்: திருச்செங்கோட்டில் தற்கொலை செய்து கொண்ட, டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் தற்கொலையில் பல விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன. தற்கொலை முன்பாக விஷ்ணு பிரியா எழுதிய கடிதத்தின் அனைத்து பக்கங்களையும் வெளியிடாமல், குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டுமே போலீசார் வெளியிட்டுள்ளதாகவும், தற்கொலைக்கான காரணங்களை போலீசார் மூடிமறைத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015 ஜூன் 23ந் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். கோகுல்ராஜ் சந்தேக மரணத்தை பல்வேறு வலியுறுத்தல்களுக்கிடையே கொலை வழக்காக பதிவு செய்தது காவல்துறை. கொலை வழக்கு பதிந்த சில நாட்களில் அதாவது ஜூலை 2ந் தேதி சந்திரசேகரன் அவருடைய மனைவி ஜோதிமணி, சதீஸ்குமார், ரஞ்சித்குமார், செல்வராஜ், ஸ்ரீதரன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியான யுவராஜ் இன்னமும் தலைமறைவாக உள்ளார். அவ்வப்போது இவர் பேசும் பேச்சுக்கள் விடியோக்கள் வாட்ஸ் அப்பில் வெளியாகின்றன.
என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனையைக் கூட ஏற்கொள்வேன் என்று கூறும் யுவராஜ் விஷ்ணு பிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள ஆடியோவும் உலா வருகிறது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதலில் கைதான ஆறு பேரைத் தவிர சங்கர், குமார் (எ) சிவக்குமார் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக, கோகுல்ராஜ் கொலை வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்பில்லாத இருவர் ‘கணக்கு'க் காட்ட கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் மீது குண்டாஸ் போட உயரதிகாரி தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் விஷ்ணுப் பிரியாவின் தோழி மகேஸ்வரி குற்றம்சாட்டுகிறார்.
நேர்மையான அதிகாரி
காவல்துறை வட்டாரத்தில், விஷ்ணுபிரியா என்றாலே நேர்மையான அதிகாரி என்று சொல்கிறார்கள். இதன்காரணமாக அவர் பல்வேறு பிரச்னைகளையும் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதையெல்லாம் சமாளித்து சிறப்பாக செயல்பட்டு வந்த நேரத்தில் அவர் தற்கொலை முடிவு எடுத்துள்ளதற்கு வேறு ஏதோ முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
அழுத்தம் கொடுத்த அதிகாரிகள்
கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக விஷ்ணு பிரியாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் வந்துள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறப்பாக செயல்பட்டுள்ளதை கோகுல்ராஜின் தாயாரும் ஒப்புக்கொண்டுள்ளார். விஷ்ணுபிரியாவின் தற்கொலை சம்பவத்தை கேள்விப்பட்ட கோகுல்ராஜின் தாயார், 'திறமையான அதிகாரியை இழந்து விட்டேன். என்னுடைய மகன் சாவுக்கும், விஷ்ணுபிரியா மேடம் சாவுக்குப்பின் மறைந்துள்ள உண்மைகள் வெளியில் கொண்டு வர வேண்டியது அரசின் பொறுப்பு' என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்திருக்கும் மர்மம்
விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியும் கூட போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரை மறைமுகமாக நிரூபணப்படுத்தியுள்ளார். இதையொட்டி சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்குப் பின்னால் பல மர்மங்களும் மறைந்து இருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
முக்கிய தடயம்
விஷ்ணுப் பிரியாவின் கடிதத்திலேகூட இதற்கான ஆதாரத்தைப் பார்க்க முடிகிறது. எனக்கு இந்த வேலை ரொம்ப இஷ்டம் தான். கடவுள் மாதிரி... ஆனா நான் இதுக்கு சூட்டபுள் இல்ல. ஐ மேட் எ மிஸ்டேக். இந்த கில்ட் என்ன ரொம்ப கஷ்டப்படுத்துது" என்று விஷ்ணுப் பிரியா தான் எழுதிய தற்கொலை கடிதத்தில் குறிப்பிடுகிறார். விஷ்ணுப் பிரியா தற்கொலைக்கான காரணத்தை அறிவதில் இது முக்கியமான தடயமாக பயன்படலாம்.
பகிரங்க குற்றச்சாட்டு
அடுத்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கோகுல்ராஜ் கொலைக்கும் தனது தற்கொலைக்கும் தொடர்பில்லை என்கிறார்; என் தற்கொலையை வைத்து பிரச்னை செய்யாதீர் என்கிறார். தனது தற்கொலைக்கான காரணத்தை தனக்கு நெருக்கமானவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் அவர் சொல்வது போலத் தெரிகிறது. அந்த அடிப்படையில்தான் விஷ்ணுப் பிரியாவின் தோழி மகேஸ்வரி, கோகுல்ராஜ் கொலை விசாரணையில் தனது தோழி அனுபவித்த அழுத்தங்களை பகிரங்கமாக முன்வைக்கிறார்.
தற்கொலை கடிதம்
காவல்துறை கடித நகல்களை ஊடகங்களுக்கு வழங்கியதில்தான் சிக்கல் என்கின்றனர். தற்கொலைக்கு முன், விஷ்ணுபிரியா, 10 பக்க கடிதம் எழுதியிருந்ததாக, முதலில் தகவல் வெளியானது. ஆனால், பத்திரிகையாளர்களுக்கு, ஒன்பது பக்க கடிதத்தை மட்டுமே, இரு பாகங்களாகபோலீசார் வழங்கினர். மேலும், கடிதத்தில் உள்ள தகவல்கள் அனைத்துமே, விஷ்ணுபிரியா, தன் குடும்பத்தாருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளாகவேஉள்ளது. அதிலும், தான் தற்கொலை செய்து கொள்ள மனமின்றி, அந்த காரியத்தை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனால், அவரது தற்கொலைக்கு, 'டார்ச்சரே' காரணம் என்பது, இலைமறை காயாக தெரிய வந்துள்ளது. ஏனெனில் தான் சொல்லவந்த விஷயத்தை மறைமுகமாகவேணும் அவர் சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். வழக்கமாக காவல் தரப்பில் தரப்படும் ‘தற்கொலைக்கு யாரும் காரணமல்ல' என்று போகிற போக்கில் சொல்லப்பட்டிருக்கின்றன.
தோழியின் குற்றச்சாட்டு
விஷ்ணுபிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பியுமான மகேஸ்வரியிடம் தற்கொலை செய்வதற்கு முன்பு விஷ்ணுபிரியா போனில் பேசியுள்ளார். அப்போது எஸ்.பி லைனில் வருவதாக மகேஸ்வரியின் இணைப்பை துண்டித்துள்ளார். இதன்பிறகு அவர் தற்கொலை செய்து இருப்பதால் உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்துள்ளார். இதை வெளியில் சொல்வதால் என்னுடைய வேலைப்பறி போனாலும் பரவாயில்லை என்று தைரியமாகவே ஓர் குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.ஜி சங்கர், டி.எஸ்.பி. மகேஸ்வரியின் தகவல் அர்த்தமற்றது. ஏதோ உள்நோக்கத்தில் அவர் இதுபோன்ற தகவலை தெரிவித்துள்ளார் என்று விளக்கமளித்துள்ளார்.
குற்றவாளிகள் யார்?
மகேஸ்வரி சொன்ன குற்றச்சாட்டு, கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘ஒரு தவறு' ஆகியவற்றை வைத்து விஷ்ணுப் பிரியாவை தற்கொலைக்குத் தூண்டியவர் யார்? அல்லது தூண்டிய விஷயம் என்ன என்பதை சிபிசிஐடி போலீசார் கண்டறிய வேண்டும். கோகுல்ராஜ் கொலையில் தவறாக குற்றவாளிகள் ஆக்கப்பட்ட இரண்டு பேர் யார் என்பதும் அவர்களை குற்றவாளிகளாக்க நிர்பந்தித்தவர்கள் யார் என்பதும் தெரியப்பட வேண்டும்.
எஸ்.பியின் மறுப்பு
அதே நேரத்தில் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில், உயர் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவது தவறு. கோகுல்ராஜ் கொலை வழக்கில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில், தனி நபர் மீது எப்படி நிர்ப்பந்தப்படுத்த முடியும். அந்த வழக்கு, என் மேற்பார்வையில் நடக்கிறது. எதுவாக இருந்தாலும் உண்மையை மறைக்க முடியாது என்கிறார் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. செந்தில் குமார்.
கடிதம் எங்கே
விஷ்ணு பிரியாவின் தற்கொலைக்கான காரணங்களை மூடிமறைக்க, நாமக்கல் போலீசார் முற்பட்டுள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளதால், கடிதத்தின் நகல், டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்'பில் உள்ளதா? என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்த துவங்கி உள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, கடிதத்தின் முழு தகவல்களையும் வெளியிட வேண்டும் என்பதே நேர்மையான போலீசார் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இதன் மூலமாவது விஷ்ணு பிரியவின் தற்கொலையில் உள்ள விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?