இப்படி ஒரு அரசை இதுவரை தமிழகத்தில் பார்த்ததில்லை... பழ.கருப்பையா விளாசல்
இதுபோன்ற வெட்கங்கெட்ட அரசை தமிழகத்தில் இதுவரை நான் பார்த்ததில்லை என்று முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்தார்.
சென்னை: எடப்பாடி அரசை போன்ற வெட்கம் கெட்ட அரசை தமிழகத்தில் நான் இதுவரை பார்த்ததில்லை என்று முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்தார்.
எடப்பாடி அரசு குறித்தும் ஆளுநரின் ஆய்வு குறித்தும் சன் நியூஸ் தொலைகாட்சி சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா கலந்து கொண்டு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஆளுநருக்கு சட்டவரையறைகள் உண்டு. ஒரு ஆளுநர் தேவைக்கு மேல் எதற்குள்ளும் நுழைய முடியாது. ஏனென்றால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்.
அரசாங்கத்தை கவிழ்க்காமல் விட்டாரே
கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது ஆளுநரின் பணி அல்ல. அதை செய்வது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணி. அரசாங்கத்தை கவிழ்த்து விடாமல் அரசு அதிகாரிகளிடம் ஆளுநர் ஆய்வு நடத்தியதோடு போகட்டும் என்பதற்காகத்தான் எடப்பாடி எகிறாமல் உள்ளார்.
மோடியின் நிலை இதுதான்
தாங்கள் ஆளும் மாநிலங்களில் தாங்களே ஆள்வது. ஆளமுடியாத மாநிலங்களில் ஏஜென்டுகளை வைத்து ஆள்வது. இதுதான் மோடியினுடைய நிலைப்பாடு.ஆகவே புதுச்சேரியிலும், டெல்லியிலும், தமிழகத்திலும் பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் நுழைந்து இதுபோல் அதிகாரங்களை உருவாக்குகின்றனர். எடப்பாடி அரசை போல் ஒரு வெட்கங்கெட்ட அரசு தமிழகத்தில் இதுவரை இருந்தது கிடையாது.
ஊராட்சி தலைவராக இருக்கக் கூட தகுதியில்லை
எடப்பாடி உள்ளிட்டோருக்கு மாநில அரசின் நலன்கள் முக்கியமல்ல. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஊராட்சிக்கு தலைவராக இருப்பதற்குக் கூட தகுதியற்றவர்கள். ஒரு விபத்தின் காரணமாக இந்த நாட்டினுடைய அதிகார மையத்தில் ஏறி அமர்ந்து விட்டனர். ஒரு அரசு பெரும்பான்மையை இழக்கும்போது அந்த அரசை நீக்கிவிடுவதா, அல்லது மாற்று அரசுக்கு வழி வகுப்பதா என்பதை பார்ப்பதுதான் ஆளுநரின் பணி. சிக்கல் ஏற்படும் போதுதான் ஆளுநர் செயல்பட வேண்டும்.
ஆட்டிவிட்டது யார்?
எடப்பாடி ஆட்சி அரியாசனத்தில் உள்ளது. ஆனால் ஆட்டிவைப்பது மோடிதான். இப்போது ஆளுநரின் மூலம் இன்னொரு ஆட்சியை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பான்மை இல்லாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான் ஆளுநரின் பணி.