டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. சரணடைந்த ஜெயக்குமார் மனு
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பில்லை என சைதாபேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சென்னை முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை அறிவித்து அவரது புகைப்படத்தை வெளியிட்டு சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஜெயக்குமாரை பற்றி தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் கொடுக்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் அறிவித்து தேடி வந்தார்கள்.
இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜெயக்குமார் மட்டும் நீண்ட நாட்களாக தேடப்படும் குற்றவாளியாக இருந்தார்- இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.
ஜெயக்குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனக்கும் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் தன் பெயரை கெடுக்கும் நோக்கில் இந்த வழக்கில் காவல்துறை செயல்படுகிறது.
TNPSC scam: மோசடிக்கு மூளையாக.. ஜெயக்குமார்.. அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்.. அதிர்ச்சி தகவல்
சிபிசிஐடி காவல்துறையினர் உள்நோக்கத்துடன் தனது புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டு அவதூறு செய்கிறது. மக்களிடம் நன்மதிப்பை பெற பொய்க்குற்றச்சாட்டுகளை என் மீது காவல்துறை சுமத்தி உள்ளது என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.