ஜெயலலிதாவின் இதயம் நின்ற போது சிகிச்சை தர அனுமதியளிக்கவில்லை - டாக்டர் சுவாமிநாதன்
ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்த போது மருத்துவமனையில் இருந்தேன், ஆனால் சிகிச்சை அளிக்க என்னை அனுமதிக்கவில்லை என்று மருத்துவர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்த போது மருத்துவமனையில் இருந்தேன், ஆனால் சிகிச்சை அளிக்க என்னை அனுமதிக்கவில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் சுவாமிநாதன் புகார் கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவரின் மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்ததாக கூறப்பட்ட போது சிகிச்சை அளித்த டாக்டர் சுவாமிநாதன், விசாரணை கமிஷன் உத்தரவுப்படி, நீதிபதி ஆறுமுகசாமி முன் ஆஜராகி இன்று விளக்கமளித்தார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் விசாரணை ஆணையத்திற்கு வந்தார்.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சைகள் குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று சிகிச்சை தொடர்பான ஆவணங்களை இரண்டு சூட்கேஸ்களில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தாக்கல் செய்துள்ளது.
அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகளுக்ககும் ஆறுமுகசாமி ஆணையம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சுவாமிநாதன் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவிற்கு இதய முடக்கம் ஏற்பட்ட போது மருத்துவமனையில்தான் இருந்தேன். ஆனால் என்னை சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதய முடக்கம் ஏற்பட்ட போது இதய சிகிச்சை நிபுணரை சிகிச்சை தர அனுமதிக்காதது ஏன் என்றும் அவ்வாறு உத்தரவிட்டது யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.